தமிழ்தேசத்தின் அடையாளத்தை அழித்து அவர்களை அடிமைப்படுத்தும் ஒரு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைப் பொறிமுறையின் ஒரு பகுதி-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

409

 

ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 27 ஆவது கூட்டத் தொடரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

un_sl_meeting_005

அங்கு இடம்பெற்ற நிகழ்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையிலேயே மேற்படி விடயம் தொடர்பாக அவர் கவலை வெளியிட்டார். அங்கு அவர் இன்று வியாழக்கிழமை கூறியவை வருமாறு:- ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை சம்பந்தமான வாய்மொழி மூல அறிக்கையை எமது அமைப்பு வரவேற்கிறது. மனித உரிமை ஆணையகத்தின் முன்னைய தீர்மானம் சம்பந்தமான விரிவான பொருட்கோடலை / விளக்கத்தைக் கொடுத்தமையையும் நாம் வரவேற்கிறோம்.

குறிப்பாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக்குழுவானது பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நேரடியாக தகவல்களை பெறுவதற்கும் அதனை வலிமைப்படுத்துவதற்கும் முன்னுரிமை கொடுப்பதாகக் குறிப்பிட்ட ஆணையாளரின் அறிக்கையை வரவேற்கிறோம். இந்த விசாரணைக்க்கு நேரடி சாட்சியங்களை வழங்கக்கூடிய மிகப்பெரும்பான்மையானோர் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்கள் என்பது மனித உரிமை ஆணையாளர் அறிந்ததே.

தொடர்ந்தும் பாதிக்கப்படும் மக்கள் என்ற வகையில் இந்த விசாரணைக்குத் தமது சாட்சியங்களை வழங்குவதற்கு அவர்கள் பெரிதும் விருப்புக் கொண்டிருக்கிறார்கள். களத்தில் வாழுகின்ற – பாதிக்கப்பட்ட – மக்களின் சாட்சியங்களை பதிவுசெய்யாதவிடத்து, அவ்விசாரணை முழுமையானதாகவோ தீர்க்கமானதாகவோ அமையாது . ஆகவே, பாதிக்கப்பட்ட இந்த மக்கள் தமது சாட்சியங்களை நேரடியாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக் குழுவிற்கு சமர்ப்பிப்பதற்கு ஏதுவான பொறிமுறைகளை உறுப்பு நாடுகள் முன்வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். போரின் போதும், அதன் பின்னரும் வடக்கைப் போலவே கிழக்கும் பாதிக்கப்பட்ட போதிலும் இங்கு, இலங்கையின் வடபகுதி பற்றியே முக்கியத்துவம் கொடுத்துப் பேசப்படுகிறது.

உதாரணமாக, 2009 முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட கொடூர குற்றங்களுக்குச் சமனான குற்றங்கள் 2007 இல் கிழக்கின் வாகரையிலும் நிகழ்த்தப்பட்டன. அத்தோடு வடக்கின் வலிகாமத்தில் நடைபெறும் நில அபகரிப்புப் போலவே கிழக்கின் சம்பூரில் நிகழும் நில அபகரிப்பும் மிகவும் அபாயகரமானதாகும். எனவே, கிழக்கு மாகாணம் பற்றியும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக விசாரணைக்குழு போதிய முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று நாம் வேண்டிக் கொள்கிறோம். தமிழர்கள், அவர்களது தமிழர்கள் என்கிற தேசிய அடையாளத்தினாலேயே தொடர்ந்தும் இலக்கு வைக்கப்படுகிறார்கள் என்பதை, மனித உரிமைகள் ஆணியாளரின் வாய்மொழிமூல அறிக்கை குறிப்பிடத் தவறியமையை நாங்கள் கவலையுடன் கவனத்தில் கொள்கிறோம். குறிப்பாக, (அந்த அறிக்கையில்) மத சிறுபான்மையினர் இலக்கு வைக்கப்படுவதை கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் இலக்கு வைக்கப்படுகின்றனர் எனப் பெயர் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கின்ற அதேவேளை, தமிழர்கள் எனக் குறிப்பிடுவதை தவிர்த்திருப்பது மிகவும் ஏமாற்றத்தைத் தருகிறது.

மனித உரிமைகள் ஆணையாளரது வாய்மொழி மூல அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதில் பெரும்பான்மையான சம்பவங்கள், தமிழர்களின் இலங்கைத்தீவில் தமிழ்தேசத்தின் அடையாளத்தை அழித்து அவர்களை அடிமைப்படுத்தும் ஒரு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைப் பொறிமுறையின் ஒரு பகுதியே ஆகும். தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நியாயமாகவும் வெளிப்படையாகவும் புரிந்து கொள்ளல் இங்கு மிகவும் அடிப்படையானது. அந்த அடிப்படையில் விசாரணைகளைக் கொண்டு செல்லுமாறு மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தை நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்

SHARE