டீச்சர் ஆக ஆசைப்படும் பூர்ணா 

416



சென்னை; பூர்ணாவுக்கு டீச்சர் ஆகும் ஆசை வந்திருக்கிறது. ‘கொடைக்கானல், ‘கந்தகோட்டை, ‘துரோகி, ‘வித்தகன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் பூர்ணா. தமிழில் கைவசம் படங்கள் இல்லாத நிலையில் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் நேரத்தை வீணாக்காமல் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக நடன பள்ளி நடத்த முடிவு செய்திருக்கிறார்.இதுபற்றி பூர்ணா கூறியதாவது:நடன பள்ளி தொடங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை உள்ளது. கேரள மாநிலம் கண்ணூதான் எனது சொந்த ஊர். அந்த இடத்திலேயே நடன பள்ளி தொடங்குவதற்கு எனது தந்தை உதவுவதாக கூறி இருக்கிறார். நான் வைதீக குடும்பத்தை சேர்ந்தவள். ஆனாலும் பல்வேறு நடனங்களை கற்க எனது பெற்றோர் ஊக்குவித்தனர்.

நிகழ்ச்சி ஒன்றில் நான் தோன்றி ஆடியது பலரையும் கவர்ந்தது. அது எனக்கு நடிப்பு வாய்ப்பை பெற்றுத்தந்தது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் மேடைகளில் கிளாசிக் நடனம் ஆடுகிறேன். எனது குடும்பத்தினரும், நண்பர்களும் எந்த நேரத்திலும் நான் நடனத்தை கைவிட்டுவிடாதபடி ஊக்குவித்து வருகின்றனர். நடனம் கற்றிருப்பதால் சினிமா நடனம் ஆடுவது எளிதானது என்கிறார்கள். அப்படி இல்லை. சினிமா நடனம் என்பது நான் கற்ற நடனத்திலிருந்து மாறுபட்டது. கர்நாடக இசைக்கு நடனம் ஆடுவது எனக்கு எளிது. சினிமா நடனம் கொஞ்சம் கஷ்டம்தான். தற்போது தெலுங்கில் ‘அவுனு படத்தின் 2ம் பாகத்தில் நடித்து வருகிறேன்.இவ்வாறு பூர்ணா கூறினார்

 

SHARE