மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையாளர்-தேர்தல் ஆணையாளர் வீட்டுக்காவலில் வைக்கப்படலாம்?-

421

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையாளர் அறிவித்தால், அவரை வீட்டுக்காவலில் வைக்கப்படலாம் என நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹமட் அவரது இடத்திற்கு கொண்டு வரப்படலாம் எனவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள ஊடகவியலாளர் ஒருவரின் சகோதரராவர் என்பதால் அவர் மீது சந்தேகம் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

தேர்தல் ஆணையாளர் தனது சகோதரரான ஊடகவியலாளருடன் கடந்த காலங்களில் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து பாதுகாப்பு பிரிவினர் தேடி வருவதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் சிறிய கட்சிகள் தேர்தல் ஆணையாளரை சந்திக்க செய்து அவருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட உள்ளதாக பேசப்படுகிறது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையாளர்,

யார் தேர்தலுக்கு தயாரானாலும் நாங்கள் தயாரில்லை. அத்துடன் இதுவரை எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

அத்துடன் தயாரில்லை என்று தீயணைப்பு படையினர் போல் தயாராகாமல் இருக்கவும் முடியாது. மேலும் யார் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட போகின்றனர் என்பதும் எனக்கு தெரியாது.

அதேபோல் இப்படியான விடயங்கள் குறித்து பதிலளிப்பதற்கு காலம் இருக்கின்றது. அறிவிப்பு வந்ததும் நான் சட்டத்திற்கு அமைய கடமையை செய்வேன் என தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE