மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடக்கு முதல்வர் அனுதாபம்!

441
பதுளை மாவட்டத்தில் கொஸ்லாந்த பிரிவில் உள்ள ஹல்துமுல்ல- மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற மண் சரிவில் பல உயிரிழப்புக்களும், பாதிப்புக்களும் உண்டாகியுள்ளமை எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேற்படி அனர்த்தம் தொடர்பில் முதலமைச்சர் இன்றைய தினம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மேற்படி அனர்த்தச் சம்பவத்தில் இதுவரையில் 16 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்ற பத்திரிகை செய்தி எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

முன்னதாகவே பல இன்னல்களின் மத்தியில் வாழ்கின்ற மலையக மக்களுக்கு இந்த இயற்கை அனர்த்தம் பேரழிவை உண்டாக்கியிருக்கின்றமை அனைவரின் உள்ளங்களையும் வேதனைக்குள் ளாக்கியுள்ளது.

இவ் அனர்த்தத்தில் உயிரிழந்த எமது சகோதர சகோதரியர்கள், குழந்தைகளை நினைவுறுத்தி வடமாகாண சபையின் சார்பிலும், வடபுலத்திலுள்ள மக்கள் சார்பிலும், எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு கடமைப்பட்டிருக்கின்றோம்.

இன்று இது பற்றிய சகல நடவடிக்கைகளையும் எமது அலுவலர்கள் எடுத்து விரைவில் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று, உதவிகளை வழங்குவர்.

எமது அவைத்தலைவர் சீ.வி.கே.சிவாஞானம் மேற்பார்வையின் கீழ் சகல நடவடிக்கைகளும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன என முதலமைச்சர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

– See more at: http://www.tamilwin.net/show-RUmszAQUKXkw4.html#sthash.fnNr9w0C.dpuf

SHARE