மலையக மக்களின் பாதுகாப்பானதும் நிரந்தரமானதுமான வாழ்க்கை பற்றி இனி சிந்திக்க வேண்டும்-சிறீதரன் எம்பி

452

மலையக மக்களின் பாதுகாப்பானதும் நிரந்தரமானதுமான வாழ்க்கை பற்றி இனி சிந்திக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாரிய மண்சரிவினால் புதையுண்டுபோன கொஸ்லாந்த, மீரியபெத்த போன்ற இடங்களில் ஏற்பட்ட பாதிப்புக்களையும் பாதிக்கப்பட்ட மக்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மலையகத்தை சேர்ந்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் அக்கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பிரதி அமைச்சர் ராதாகிருஸ்ணன் உட்பட பலர் சென்றிருந்தனர்.

இதன் போது கருத்து வெளியிட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன்,

மலையக சொந்தங்களின் வாழ்கையில் இந்த சம்பவம் ஒரு மாறுதலை தரவேண்டும்.

இந்த மக்கள் பற்றிய சிந்தனையில் அரசாங்கமும் மலையகத்தை நிர்வகிக்கும் அரசியல் தலைமைகளும் மறுமலர்ச்சிக்கான பாதையை திறப்பதற்கு முயலவேண்டும்.

காலதிகாலமாக கொத்தடிமைகளாகவே வாழுகின்ற இந்த மக்களுக்கு லயன் வாழ்க்கை மாறி அவர்களுக்கு நிரந்தரமானதும் பாதுகாப்புமான வீட்டுவசதிகள் வாழ்வு ஏற்படுத்தப்படுவது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

இன்று மண்சரிவினால் ஏற்பட்ட ஏழை மக்களின் மரணம் தம் எதிர்கால சந்ததிக்கான தியாகமாக கருதப்பட்டு, அவர்களின் நினைவுகள் சுமந்து மலையக சொந்தங்களும் மலையக அரசியல் தலைமைகளும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் துரிதமாக ஒரு சுபீட்சமான மலையக வாழ்வு நோக்கி சிந்தித்து செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

 

SHARE