வடமாகாண சபைக்கு 5831 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அதனை அவர்கள் செலவிட முடியாமல் இருக்கின்றார்கள் எனவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என சுட்டிக்காட்டியிருக்கும் அவை தலைவர்,

438
வடமாகாண சபைக்கு 5831 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அதனை அவர்கள் செலவிட முடியாமல் இருக்கின்றார்கள் எனவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என சுட்டிக்காட்டியிருக்கும் அவை தலைவர், மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட மூலதன செலவீனம் 1876 மில்லியன் ரூபா மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி நிதி விடயம் தொடர்பில் இன்றைய தினம் வடமாகாண சபையில் நடைபெற்ற விசேட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வடமாகாண சபைக்கு 19481 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், அதில் மீண்டுவரும் செலவீனம் மற்றும் எமது நிதி கையாளுகைக்குட்பட்ட 1876 மில்லியன் உள்ளடங்கலான 15,526 மில்லியன் ரூபா நிதி மட்டுமே மாகாண சபையின் நிதி கையாளுகைக்கு உட்பட்டிருக்கின்றது.

மீதமாகவுள்ள 3955 மில்லியன் ரூபா நிதி எமது நிதி கையாளுகைக்குட்பட்டதல்ல.  அந்த நிதி மாகாண சபையின் திறைசேரிக்கு ஊடாக ஒதுக்கப்படாமல் நேரடியாக திணைக்களங்களுக்கே ஒதுக்கப்படுகின்றது.

இந்த நிதியில் வடமாகாண சபையினர் அல்லது மாகாணசபை அதிகாரிகள் தலையீடு செய்ய முடியாத வகையில் சட்டம் இருக்கின்றது.

இந்நிலையில் வடமாகாண சபைக்கு 5831 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அதனை அவர்கள் செலவிடவில்லை. எனவும் முன்வைக்கபடும் குற்றச்சாட்டுக்கள்,
பொருத்தமற்றவை என அவைத்தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறான விமர்சனங்களை முன் வைப்பவர்கள், மாகாணசபையின் ஆளும் தரப்பினராகிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஒரு ஆட்சியை நடத்த முடியாமல் இருக்கின்றார்கள் என மக்களுக்கு காண்பிக்க நினைக்கின்றார்கள்.

ஆனால் அவ்வாறான விமர்சனங்களில் உண்மையில்லை என்பதுடன், எமக்கு ஒதுக்கப்பட்ட மூலதன ஒதுக்கீட்டு நிதியினை இவ்வருட இறுதிக்குள் அரச நிதி கையாளுகை நியமங்களுக்கு அமைய செலவிட்டு முடிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாகாண சபையின் அமைச்சர்கள், முதலமைச்சர், அவைத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியேரை விமர்சித்து மொட்டைக் கடிதங்கள் தமக்கு கிடைத்துக் கொண்டிருப்பதாக அவைத்தலைவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான விமர்சனங்களை முன்வைக்கும் விமர்சகர்கள் தங்களை முதலில் அடையாளப்படுத்திக் கொண்டு உண்மையானதும், நேர்மையானதுமான விமர்சனங்களை முன்வைத்தால் அது இரு பகுதியிருக்கும் நன்மையளிக்கும் எனவும் கூறியிருக்கின்றார்.

 

SHARE