வடக்கில் தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசு ஒன்று இயங்கினாலும், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் தமது கட்டுப்பாட்டிலேயே வடபகுதி மக்களும், நிர்வாகக் கட்டமைப்புக்களும் இருக்கவேண்டும் என்பதில் குறியாகவுள்ளனர். அதுமட்டுமன்றி இனப்பரம்பலை மாற்றியமைக்கவும் அவர்கள் முயற்சிக்கின்றனர். இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்குமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.
மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் (பி.யூ.சி.எஸ்) ஏற்பாட்டில் நடைபெற்ற கே.ஜி.கண்ணபிரான் நினைவு நினைவு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தமிழகம் சென்ற முதலமைச்சர், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று திங்கட்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- போருக்குப் பின்னரும் இலங்கையில் தமிழர்கள் நிலை சற்றும் மாறவில்லை.
இலங்கையில், வடக்கு மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி ஒருபுறம் நடைபெறுகிறது. அதேவேளையில், இன்னொருபுறம் இலங்கை அரசு ஆதரவுடன் ஆளுநர், முதன்மைச் செயலாளர் மற்றும் சில அதிகாரிகள் தலைமையில் முரண்பாடான மற்றொரு நிர்வாகமும் செயல்படுகிறது. தெற்கில் இருந்து சிங்கள மக்களைக் கொண்டு வந்து வடமாகாணத்தில் குடியேற்ற இலங்கை அரசு சகல நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. இதனால், தமிழர் நலனுக்காக நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தடைப்படுகின்றன. இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது சட்டத் திருத்தம், திருத்தப்பட்டாலும் அது எங்களுக்கு நன்மை அளிக்காது.
அதில் பல்வேறு சிக்கல் நிலவுகிறது. தமிழர்கள் தங்கள் வாழ்வுரிமையைப் பெற – இந்திய அரசு தலையிட்டு உதவி செய்ய வேண்டும்” – என்றார். தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை அளித்துள்ளது தொடர்பான கேள்விக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து பேச விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் 1976 இற்குப் பின்னர் இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்படவில்லை என்பதை மட்டும் தான் சுட்டிக்காட்டி விரும்புகிறார் எனவும் தெரிவித்தார்.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் குடும்பத்தினர் தன்னை சந்தித்துப் பேசினர் எனவும் முதலமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.