வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள பாரதி முன் பள்ளியின் 37வது நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற கலைவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்த வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்கள் வன்னி வாழ் மக்கள் சார்பாக பாரதி முன்பள்ளி அதிபர் திருமதி.சந்திரா ஜெயராசா அவர்களின் மகத்தான கல்விச் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்து, மாலை அணிவித்து கேடயம் வழங்கிக் கௌரவித்தார். தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் உரையாற்றுகையில் யாழ் மண்ணில் தொடங்கிய முன்பள்ளி அதிபரின் கல்விப்பணி நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக அவர் யாழ் மண்ணை விட்டு வெளியேறி 1992ம் ஆண்டில் வவுனியா மண்ணில் காலடி வைத்து தனது பணியைச் செவ்வனே தொடங்கி இன்றுவரை வவுனியா வாழ் மக்களின் சிறார்களுக்கு சிறந்த கல்வியைப் புகட்டி வந்ததை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
சிறுவயதில் மாணவர்களின் மத்தியில் கல்வியை மட்டும் அன்றி கலை, கலாசாரம், ஆன்மீகம், மொழி அறிவு, ஒழுக்கம் எனப் பல்வேறுபட்ட துறைகளிலும் மிகவும் சிறந்த முறையில் எமது செல்வங்களுக்கு அறிவை வளர்த்து வரும் செயல் எமது முன்பள்ளி அதிபரையே சாரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. முன்பள்ளி அதிபர் அவர்கள் தனது வருமானத்தை இலக்காகக் கொண்டு செயற்படாமல் இப்பணியை ஒரு சமூக சேவையாக நினைத்து செயலாற்றியமை மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும். பாரதி முன்பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்கள் முன்பள்ளிக் கல்வியை முடித்து பாடசாலைக்கு காலடி எடுத்து வைக்கும் போது அவர்களை சகல துறைகளிலும் தேர்ச்சி பெற்ற முழமையான மாணவர்களாக அனுப்பும் பணியை மிகவும் சிறப்பாக செய்துவருகிறார். பாரதி முன்பள்ளியின் அதிபர் அங்கு கற்பிக்கின்ற ஆசிரியர்கள் அனைவரும் மனித நேயத்துடனும், ஆர்வத்துடனும் செயலாற்றி வருவதை நான் நன்கு அறிவேன். இத்தகைய உன்னதமான பணியை எமது சமூகத்திற்கு ஆற்றிவரும் பாரதி முன்பள்ளியின் அதிபர் அவர்களை இந்த சமூகம் பாராட்டாமல் இருக்க முடியாது.
எமது பாரம்பரிய கலை, கலாசாரங்கள் அருகிக்கொண்டு செல்கின்ற இக்காலகட்டத்தில் அதாவது மேல்நாட்டு மோகத்தினால் அந்நாட்டு கலை கலாசாரம் வளர்ந்து வருகின்ற இன்றைய பிரதிபலிக்கக்கூடிய கலைநிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி எமது கலை கலாசாரங்களை வளர்த்து வருகின்ற பாரதி முன்பள்ளி அதிபர் அவர்களை எமது சமூகம் சார்பாக அகம் மகிழ்ந்து வாழ்த்திப் பாராட்டுவதில் பெருமகிழ்வடைகின்றேன்.
மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அஞ்சலி நிகழ்வு வவுனியாவில் அனுஷ்டிப்பு.
பதுளை மாவட்டம் கொஸ்லந்த என்னும் இடத்தில் இடம்பெற்ற மண்சரிவினால் பாதிப்படைந்த மலையக மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கடந்தவாரம் பூந்தோட்டம் நரசிம்மன் ஆலயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.