ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேன அவர்கள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிலைமைகளை ஆராய்ந்தே முடிவெடுக்கும் என்று அந்த அமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன அவர்கள் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரது செவ்வியையும் தான் கேட்டதாகக் கூறிய சம்பந்தன் அவர்கள், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாக அவர் கூறிய சில அம்சங்களை வரவேற்ற போதிலும், அவை குறித்தும், யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்தும் தமது கட்சியே ஆராய்ந்து முடிவெடுக்கும் என்றும் கூறினார்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானால் 100 நாட்களுக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வேன் எனக் கூறியிருக்கிறார். அது வரவேற்கப்பட வேண்டீய விடயம். இன்னும் பல நல்ல கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். அவர் ஒரு நிதானமாக செயற்படக்கூடிய அரசியல் வாதி.
இனப்பிரச்சினை சம்பந்தமாக அவர் எதுவித கருத்துக்களை முன்வைக்கவில்லை. ஆனால் அவருடன் இணைந்திருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவர்கள் சிறுபான்மையினர் பிரச்சினை நியாயமான முறையில் தீர்க்கப்படும் என கருத்துக் கூறியிருந்தார் எனவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.