வடமாகாண மக்களாகிய நாம் முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றி கூறவேண்டும். அவருக்கு வடக்கு மக்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என -வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்
வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான குருதி சுத்திகரிப்பு நிலையம், தாய்ப்பாலூட்டல் ஊக்குவிப்பு மையம், இளையோர் நேய சுகாதார நிலையம் என்பன வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களால் இன்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்- வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான குருதி சுத்திகரிப்பு நிலையம் திறப்பதற்கான கோரிக்கையை வைத்த போது முன்னாள் சுகாதார அமைச்சராக மைத்திரிபால சிறிசேன மறுப்பின்றி உடனடியாக எமது ஒதுக்கீட்டை கேட்டு 8.5 மில்லியன் ரூபா பணத்தை ஒதுக்கியிருந்தார்.
அவர் இன்று சுகாதார அமைச்சராக இல்லாவிட்டாலும் எமது மாகாண மக்கள் அவருக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கின்றோம். நானும் இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன். மாகாண வைத்தியசாலைகளில் இன்று முதன்முதலாக சிறுநீரக குருதி சுத்திகரிப்பு நிலையத்தைத் திறந்து வைக்கின்றோம். இலங்கையில் அனுராதபுரத்திற்கு அடுத்ததாக சிறுநீரக நோயாளர்களை கூடுதலாக கொண்ட ஒரு மாவட்டமாக வவுனியா மாவட்டம் காணப்படுகின்றது.
அடுத்ததாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது. ஆகவே நாங்கள் வவுனியா வைத்தியசாலையில் இவ்வாறான சிகிச்சை நிலையத்தை அமைப்பதன் மூலம் குறிப்பாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த சிறுநீரக நோயாளர்கள் இவ் வைத்தியசாலையில் இருந்து பயன்பெறக்கூடியதாக உள்ளது.
இதை விட இச்சிகிச்சைக்காக ஒருவருக்கு 3000 மூதல் 3500 ரூபா வரையில் பில்டர் வாங்குவதற்காக அறவிடவேண்டியுள்ளது. இவ்வாறுதான் அரச வைத்தியசாலைகளிலும் செய்து வருகின்றனர். எனினும் வவுனியா வைத்தியசாலையை நாடி வருபவர்களில் வறுமையானவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கு அதனை இலவசமாக கொடுப்பதற்கு நிதி தேவைப்பட்டது.
அதனை வட மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் மன்மதராஜா பெற்று தந்திருந்தார். அதனை நாம் வவுனியா பொது வைத்தியசாலை கணக்கில் 25 லட்சம் ரூபாவாக வைப்பிலிட்டுள்ளோம். இதேவேளை எமது மக்கள் பயன்பெறும் வகையில் 2015 ஆம் ஆண்டு ஒவ்வொரு மாவட்ட வைத்தியசாலைகளிலும் சிறுநீரக நோயாளர்களுக்கான குருதி சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்படும் என்பதனை உறுதியாக கூற விரும்புகின்றேன். அத்துடன் எமது வடமாகாணத்தில் உள்ள பல வைத்தியசாலைகள் அடுத்த ஆண்டு தரமுயர்த்தப்படவுள்ளன.
வவுனியா பொது வைத்தியசாலை மாகாண பொது வைத்தியசாலையாகவும் புதுக்குடியிருப்பு, மல்லாவி, சிலாவத்துறை, முருங்கன் ஆகிய இடங்களிலுள்ள வைத்தியசாலைகள் ஆதார வைத்தியசாலைகளாகவும், பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை மாவட்ட பொது வைத்தியசாலையாகவும் தரம் உயர்த்தப்படவுள்ளன. எமது வடமாகாணம் போரால் பாதிக்கப்பட்ட மாகாணம். இங்கு 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளம் விதவைகள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசேட தேவையுடையோர், போரால் பாதிக்கப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டோர் என பலர் உள்ளனர். இப்படியான நிலைமை ஏனைய மாகாணங்களில் பெரிதாக இல்லை.
இதனால் எமது மாகாணத்தில் புனர்வாழ்வு வைத்தியசாலை ஒன்றை மாங்குளத்தில் நிறுவ நடவடிக்கை எடுத்து வருகின்றோம். முன்னைய சுகாதார அமைச்சர் மைத்திரிபால எமக்கு ஆதரவுகளை தந்தார். ஆனால் தற்போதைய சுகாதார அமைச்சர் எப்படியோ தெரியாது.
ஆனாலும் எமது மாகாண வைத்தியத் துறையில் நோயாளர்கள் திருப்திப்படுமளவுக்கு எமது சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.- என்றார். இந்த நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்களான லிங்கநாதன், ம.தியாகராஜா, சி.சிவமோகன், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ரவீந்திரன், வைத்திய நிபுணர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
malarm.com