அட்வைஸ்’ செய்த மேத்யூஸ்.. நேர்மையாக நடையை கட்டிய நுவான் குலசேகரா!

425
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நடுவர் `அவுட்’ இல்லை என்று தெரிவித்தும், தான் அவுட் ஆனதை நேர்மையாக ஒப்புக் கொண்டு வெளியேறினார் இலங்கை வீரர் குலசேகரா.சிட்னியில் நடந்த முதல் காலிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் அனல் பறக்கும் பந்துவீச்சில் இலங்கை வீரர்கள் வரிசையாக வெளியேறினர். இதனால் இலங்கை அணி நெருக்கடியில் சிக்கியது.

அப்போது சங்கக்காரா அணியை நெருக்கடியில் இருந்து மீட்க போராடி வந்தார். 115 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்திருந்தபோது, 7வது விக்கெட்டாக களமிறங்கினார் குலசேகரா.

சங்கக்காராவிற்கு கம்பெனி கொடுத்தால் போதும் என்ற அணித்தலைவர் மேத்யூஸின் அட்வைஸின் படி, குலசேகரா விளையாட வந்தார்.

அவர் 1 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, டுமினி வீசிய சுழற்பந்து, மட்டையின் விளிம்பில் பட்டு, விக்கெட் கீப்பர் டி காக்கின் கைகளில் தஞ்சம் அடைந்தது.

இதையடுத்து, டுமினி, அம்பையரை நோக்கி விக்கெடுக்காக முறையிட்டார். ஆனால் நடுவர் அது அவுட் இல்லை என திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதையெல்லாம் பார்த்த பிறகும், குலசேகரா, பெவிலியனை நோக்கி நடையை கட்ட ஆரம்பித்தார்.

இக்கட்டான நேரத்திலும், மட்டையில் பந்து பட்டதை மறைத்து விளையாட குலசேகரா விரும்பவில்லை. நேர்மையான முறையில், வெளியேறிவிட்டார். இவரது இந்த நேர்மையான செயல் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பாராட்டை பெற்றுள்ளது.

2003 உலகக்கிண்ண அரையிறுதியின் போது, அவுஸ்திரேலியா- இலங்கை மோதிய போட்டியில், அவுஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் இப்படித்தான் நடுவர் அவுட் இல்லை என்ற பிறகும் நேர்மையாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE