அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமையன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அவர் இலங்கையில் 24 மணித்தியாலங்கள் மட்டுமே தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1972 ஆம் ஆண்டு அப்போதைய இராஜாங்க செயலாளர் வில்லியம் பியர்ஸ் ரோஜர்ஸ், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதன் பின்னர் 43 வருடங்களுக்கு பின் ஜோன் கெரி இலங்கை வருகிறார்.
சனிக்கிழமை இலங்கை வரும் கெரி, ஞாயிற்றுக்கிழமையன்று இலங்கையில் இருந்து புறப்பட்டு செல்கின்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் சந்திப்பை மேற்கொள்ளும் அவர், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் சந்திப்பை மேற்கொண்ட பின்னர் ஊடக சந்திப்பு ஒன்றிலும் பங்கேற்கவுள்ளார்.
அத்துடன் அவர் கொழும்பில் வெசாக் பந்தல் ஒன்றை திறந்து வைக்கவுள்ளதுடன், புதிய அமெரிக்க தூதரகத்திற்கான அடிக்கல்லையும் நாட்டி வைக்கவுள்ளார்.