பாகிஸ்தானில் கடத்தப்பட்ட 19 பயணிகள் சுட்டுக்கொலை: தீவிரவாதிகள் வெறிச்செயல்

337
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட 19 பயணிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த மாஸ்டங் மாவட்டம் குவேட்டாவில் இருந்து கராச்சிக்கு நேற்று இரவு இரண்டு பஸ்கள் சென்றுகொண்டிருந்தன. காத்கோசாய் என்ற இடத்தில் அந்த பஸ்களை வழிமறித்த தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தினர். சுமார் 35 பேர் வரை கடத்தி செல்லப்பட்டிருக்கலாம் என்றும், அவர்களில் 19 பேரை சுட்டுக் கொன்றுள்ளதாகவும் உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

இந்த கடத்தல் சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அங்கு தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

பலத்த பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் வாகனங்களும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். அருகில் உள்ள மலைப்பகுதியில் கிடக்கும் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

SHARE