இந்தியா – பங்களாதேஷ் அணிகள் இடை யேயான ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் டாக்காவில் இன்று நடைபெறவுள்ளது.டோனி தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் கடைசியாக உலகக் கிண்ணக் காலிறுதியில் மோதின.
இதில் இந்தியா 109 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ஆட்டத்தில் நடுவர்கள் இந்தியாவுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக பங்களாதேஷ் குற்றம் சுமத்தியது. அந்த சர்ச்சைக்கு பிறகு இரு அணிகளும் தற்போது சந்திக்கின்றன. இந்திய அணி சார்பில் தவான், ரஹானே ஆகியோர் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அணித் தலைவர் டோனி, கோஹ்லி, ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, அம்பத்தி ராயுடு, அஸ்வின் போன்ற சிறந்த வீரர்களும் அணியில் உள்ளனர். மொர்தாசா தலைமையிலான பங்களாதேஷ் அணி சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தும் நோக்கில் உள்ளது. துணை தலைவர் சகீப்–அல்–ஹசன், முஸ்பிகுர் ரகீம், மொமினுல் ஹக், தமிம் இக்பால், நாசிர் ஹுசேன், ரூபெல் ஹுசேன் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். இரு அணிகள் இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மழை காரணமாக சமநிலையில் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது. |