2009ம் ஆண்டில் இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
2014ம் ஆண்டுக்கான நாடுகளின் பயங்கரவாதம் குறித்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்த நிறைவின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் இலங்கையில் எவ்வித தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், 13 தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் அமெரிக்கா மற்றும் மலேசியா ஆகிய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டவர்கள் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் மூலம் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்களை படுகொலை செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
2014ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்து 16 புலம்பெயர் நிறுவனங்கள் மற்றும் 422 தனிப்பட்ட நபர்களுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.