மெதுவாக சுழல்கிறது பூமி! ஒரு நொடிப் பொழுதை அதிகமாக கொண்ட நாள் இன்று – நாசா

284
ஒரு நொடிப்பொழுதை அதிகமாக கொண்ட நாளாக இன்று இருக்கும் என்று நாசா அறிவித்துள்து.

பூமி மெதுவாகச் சுழல்வதால் ஏற்படும் கால மாற்றத்தைச் சரி செய்யவே இன்று ஒரு நொடி (லீப் நொடி) கூடுதலாக சேர்க்கப்பட உள்ளது.

லீப் நொடி முறை முதன்முதலில் 1972-ம் ஆண்டு பின்பற்றப்பட்டது. அதன் பிறகு, சுமார் 26 முறை இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் லீப் நொடி சேர்க்கப்படுவது இது நான்காவது முறையாகும்.

இந்நிலையில் பூமியின் தற்போதைய சுழற்சி சீராக மெதுவாகக் குறைந்து கொண்டே வருகிறது. பொதுவாக ஒரு நாள் என்பது 86,400 நொடிகள் கொண்டது.

கடைசியாக 1820-ம் ஆண்டில் தான் மிகச் சரியாக 24 மணி நேரம் என்ற கால அளவு இருந்தது. புவி வெப்பமடைதல், சூரியன், நிலா, பூமிக்கு இடையிலான ஈர்ப்பு விசைப் போட்டிகள், கடல் அலைகளின் அசைவுகள் உள்ளிட்டவை காரணமாக பூமியின் சுழற்சி வேகம் குறைந்து கொண்டே வருகிறது.

இதனால், ஒரு நாளுக்கு 86,400.0002 நொடிகளாகிறது. அதாவது, 2 மில்லி நொடிகள் அல்லது ஒரு நொடியில் 2 ஆயிரத்தில் ஒரு பங்கு நேரம் கூடுதலாக ஆகிறது. இந்த தாமதம் ஆண்டு முழுக்க தொடர்ந்து நடக்கிறது.

எனவே இந்த நேரத்தை ஈடுகட்ட, இந்தக் கூடுதல் நேரம் ஒரு நொடி சேர்ந்தவுடன் அது, வழக்கமாக நாம் பின்பற்றும் நேரத்தில் (யு.டி.சி) ஜூன் 30-ம் தேதி அல்லது டிசம்பர் 31-ம் தேதி அன்று ஒரு நொடி நிறுத்தி வைக்கப்பட்டு சரி செய்யப்படுகிறது.

வழக்கமாக, நள்ளிரவு 23:59:59 மணிக்குப் பிறகு அடுத்த நாள் 00:00::00: என்று தொடங்கும். இன்று (ஜூன் 30ம்-தேதி) நள்ளிரவு லீப் நொடி சேர்க்கப்படும்.

இதனால், ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு அடுத்த நாள் தொடங்குவதற்கு முன்பு 23:59:60 என ஒரு நொடி சேர்க்கப்பட்டு (துல்லியமாகச் சொல்வதானால் ஒரு நொடி நிறுத்தி வைக்கப்பட்டு) பின்னர் ஜூலை 1-ம் தேதி 00:00:00 என மாறும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த கால மாற்றம் வழமையானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE