மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி: அம்பலமான உண்மைகள் (வீடியோ இணைப்பு)

407
மற்றவர்களுடைய அழிவில்தான் தங்கள் வாழ்க்கை மலர்ச்சி இருக்கிறது என்று, மனிதர்கள் நம்புகிற காலம் இது என்ற வரிகள், சினிமா வசனமாக இருந்தாலும் உணவுகளிலேயே மனிதர்களை விஷம் வைத்துக்கொள்வது போல, பொல்லாத போலிகளை அரங்கேற்றி இருப்பவர்கள் அதை உண்மையாக்கி விட்டார்கள்.சீனாவின் போலி உணவுகளுக்கும் ப்ளாஸ்டிக் அரிசிக்கும் எதிரான செய்திகள் ஊடகங்களில் அதிர்வலைகளாக பரவி எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறது.கலப்படம் செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் அரிசி மற்றும் போலி உணவுகள் இந்தியா, வியட்நாம், சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதுதான் மிகவும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

தைவான், ஷான்க்ஷி ப்ரொவின்ஸ், சீனாவை மையப்படுத்திதான் ப்ளாஸ்டிக் அரிசி பற்றிய செய்தி உருவாகியிருக்கிறது.

தாவரங்களிலிருந்தும் மரங்களிலிருந்தும் கிடைக்கும் ஒட்டும் தன்மையுள்ள ஒரு ஆர்கானிக்(Organic) பிசினிலிருந்துதான் இந்த போலி அரிசி தயாரிக்கப்படுகிறது என்றும், போலி தானியங்கள் உருளைக்கிழங்கு மற்றும் தொழிற்சாலைகளில் தயாராகும் ரெசினையும்(Resin) கலந்து தயாரிக்கப்படுவதாகவும் பொதுவாக சொல்லப்படுகிறது.

இந்த ப்ளாஸ்டிக் அரிசிகள் இயற்கை அரிசிகளோடு கலந்துவிட்டால் இரண்டையும் வேறுபடுத்துவது வெறும் கண்களுக்கு கடினமானதே.

இந்த அரிசியை சாப்பிட்டால் மொத்த ஜீரண உறுப்புகளின் அமைப்பே கடுமையாக பாதிக்க நேரும்.

போலி அரிசி சமைத்தவுடன் வெப்பத்தால் விறைப்பாகி கடினமடைந்து விடும் என்பதும் சூப் தயாரிக்கும் போது மேல் அடுக்காக ப்ளாஸ்டிக் ஆடை உருவாவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூன்று கிண்ணம் ப்ளாஸ்டிக் அரிசி சாப்பிட்டால் ஜீரணிப்பது, ஒரு ப்ளாஸ்டிக் பை வயிற்றில் ஜீரணிப்பதுக்கு சமமானது என்று சீனாவின் உணவகங்களின் சங்க அலுவலகம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ள தொழிற்சாலைகளில் ப்ளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படும் வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்த பின்னர், மலேசிய உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் ஹசன் மாலிக் கூறியதாவது, சீனாவின் போலி அரிசி உண்மையோ வதந்தியோ என்பது குறித்து ஆதாரப்பூர்வமாக பிடிபடவில்லை.

அப்படி தகவல் கிடைத்தால் எங்கள் அமைச்சகத்துக்கு தெரியப்படுத்தலாம் என்றும் நாடு முழுவதும் அதற்காக எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் விவசாய மற்றும் காலநடை உணவு அதிகார மையம் கூறியதாவது, இறக்குமதி செய்யப்படும் அரிசி மற்றும் உணவுகளை நாங்கள் பரிசோதித்துதான் பயன்பாட்டுக்கு அனுமதிக்கிறோம்.

ஆனால், இதுவரை பரவி வரும் செய்தியை மெய்ப்பிக்கும் படியான போலி அரிசியோ, உணவுகளோ சிக்கவில்லை என்றும் நாங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

உலகில் வேகமாக எல்லா துறைகளிலும் வளர்ந்து வரும் நாடுகளில் சீனா முக்கியமானதாக உள்ளது.

என்றாலும், அங்குள்ள ஆட்சியில் குளறுபடியா அல்லது அவர்களுடைய சட்ட திட்டங்கள் கடைசி குடிமக்கள் வரை சென்றடைவதில் சிக்கல் உள்ளதா தெரியவில்லை.

மக்கள் தொகை அதிகமுள்ள நாடான சீனாவில் அதிக அளவிளான ஏழைகள், உணவுக்காக தெருவோரக் கடைகளையே நம்பியுள்ளனர். ஆனால் அதன் உணவு தயாரிப்புகள் எல்லாம் சமூக விரோதிகளின் கைகளுக்கு சென்றுவிட்டதோ என்று சந்தேகிக்கும் அளவில் சீனாவின் உணவு பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

குலை நடுங்க வைக்கும் கலப்பட உணவுகள்

மாமிச உணவுகளில் எலிக்கறியை கலப்பது, பன்றி இறைச்சி மிருதுவாக இருக்க தடைசெய்யப்பட்ட ரசாயனப் பொருள்களை கலந்து வேகவைப்பது. இறைச்சிகளின் எடை கூடுவதற்காக தண்ணீரை ஊசி மூலம் செலுத்துவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

தென் சீனாவில் உள்ள டாங்கன் நகரத்துக்கு அருகே தீங்கான உணவுகளை தயாரித்த குற்றத்துக்காக 2010 ம் ஆண்டில் 50 உணவு தொழிற்சாலைகள் அதிகார ஆணையங்களால் மூடப்பட்டிருந்தது.

ஆனாலும், அவற்றிலிருந்து ஒருநாளைக்கு 1.1 மில்லியன் பவுண்ட்ஸ் நூடுல்ஸ் தயாரிக்கப்பட்டு தற்போதும் விற்கப்படுவதாக நம்பப்படுகிறது.

மேலும் வாதுமை பருப்பில் சிமிண்டை உள்ளே வைத்து விற்பது. குழந்தைகள் குடிக்கும் பாலில் புரோட்டினை அதிகப்படுத்துவதற்காக மெலமின்(Melamine) என்ற ரசாயனத்தை கலந்ததால், அதை குடித்த 53 ஆயிரம் குழந்தைகள் 2009 ஆம் ஆண்டில் கடும் நோயால் பாதிக்கப்பட்டனர்.

மெலமின் ஆளைக் கொல்லும் சயனைடுக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.

போலி முட்டைகள், போலி ஒயின் என்று சீனாவின் உணவில் உள்ள போலித் தயாரிப்புகளை கேட்டாலே, அங்குள்ள மக்களை நினைத்து அனுதாபப்படவேண்டியுள்ளது.

இது மற்ற நாடுகளுக்கும் இறக்குமதி ஆகுமோ என்ற அச்சமும் இதுபோன்ற செய்திகளால் பணத்துக்காக எதையும் செய்யும் சமூக விரோதிகளுக்கும் தூண்டுகோலாகி விடுமோ என்ற எண்ணமும் ஏற்படுகிறது.

போலி உணவுகளை சாப்பிட்டு இறப்பதற்கு பதிலாக பட்டினி கிடந்து இறப்பதே மேல் என்று மக்கள் வெறுப்படையும் முன் ஆட்சியில் இருப்பவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து தடுப்பார்கள் என்று நம்புவோம்.

SHARE