சீனா வெடிவிபத்து பகுதியில் நூற்றுக்கணக்கான டன் சயனைடு: ராணுவம் தகவல்

339
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டியான்ஜின் நகர துறைமுக சேமிப்பு கிடங்கில் கடந்த 12-ம் தேதி திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை அடுக்கி வைத்திருந்த பகுதியில் (வேர் ஹவுஸ்) அதிகாலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து வெகு தூரம்வரை சிதறி விழுந்த தீக்கோளங்களால் அருகாமையில் உள்ள சில நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டிடங்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.

கடைசியாக கிடைத்த தகவலின் படி பலி எண்ணிக்கை 104-லிருந்து 112 ஆக அதிகரித்துள்ளது. 722 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 58 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்துள்ளதாகவும், காணாமல் போன 95 பேர்களில் 85 பேர் தீயணைப்பு வீரர்கள் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் வெடிவிபத்து ஏற்பட்ட சேமிப்பு கிடங்கில் நூற்றுக்கணக்கான டன் சோடியம் சயனைடு என்னும் கொடிய விஷ ரசாயனம் சேமிக்கப்பட்டுயிருந்தது தெரியவந்துள்ளது. இந்த சோடியம் சயனைடு ரசாயனம் கலந்த நச்சுகாற்றை சுவாசித்தால், உட்கொண்டால் மரணம் ஏற்படும். ஏனெனில் இது ஆக்சிஜன் செயல்பாட்டை முடக்கி விடும்.

சீனா வெடிவிபத்து பகுதியில் நூற்றுக்கணக்கான டன் சயனைடு சேமிக்கப்பட்டிருந்த தகவலை அந்நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ளது. மேலும் 217 பேரைக் கொண்ட ரசாயன மற்றும் அணு வல்லுனர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. சீன ஊடகங்களின் தகவல் படி 700 டன் சோடியம் சயனைடு இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

SHARE