இந்தியாவின் இமாலய வெற்றி.. டெஸ்ட் தொடரை கைப்பற்றும் இந்தியா: ராகுல் நம்பிக்கை

332
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணியால் எளிதில் கைப்பற்ற முடியும் என்று தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 248 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் இந்த அணியின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “2வது டெஸ்ட் போட்டியின் வெற்றியால் கிடைத்துள்ள நம்பிக்கை கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லவும் உதவியாக இருக்கும்.முதல் போட்டியில் அடைந்த தோல்வியில் இருந்து மீண்டு, துடுப்பாட்டத்தில் வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர். கீப்பர் பணியை செய்வதில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு.

4வது நாள் ஆட்டத்தின்போது விரித்திமான் சஹா துரதிர்ஷ்டவசமாக காயமடைந்ததால், எனக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அப்போது மேத்யூஸ் அடித்த பந்தை பிடியெடுத்தேன். அது எங்களுக்கு மிகவும் முக்கிய விக்கெட்.

எனது சொந்த மாநிலத்துக்காக விளையாடும் போது கீப்பிங் செய்திருக்கிறேன். அதன்பின்னர் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

2வது டெஸ்ட் போட்டியில் லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பர் பணியை சிறப்பாக செய்தபோதிலும், 3வது போட்டியில் கீப்பர் பொறுப்பு ஓஜாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE