ஈரான்: ரூ.15 ஆயிரம் கோடி ஊழலில் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

554
ஈரான் நாட்டை சேர்ந்த பிரபல கோடீஸ்வர தொழிலதிபரான மஹஃபரிட் அமிர் கொஸ்ராவி, கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து அந்நாட்டின் வங்கிகளில் போலி ஆவணங்களை காட்டி சுமார் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு கடன் பெற்றார்.

அந்த தொகையைக் கொண்டு அரசுக்கு சொந்தமான இரும்பு ஆலை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலை, இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களை வாங்கி நிர்வகித்து வந்த அவரது ஊழல், நாளடைவில் வெட்டவெளிச்சமானது.

இதனையடுத்து, இந்த ஊழல் தொடர்பாக வங்கி அதிகாரிகள், அரசு அதிகாரிகள், இடைத்தரகர்கள் உள்பட 39 பேர் குற்றவாளிகள் என்பது நிரூபணமாகி தண்டனை விதிக்கப்பட்டது.

இதில், முக்கிய குற்றவாளியான மஹஃபரிட் அமிர் கொஸ்ராவி உள்பட 4 பேருக்கு மரண தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும், மற்ற 33 பேருக்கு தலா 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

ஈரான் உச்ச நீதிமன்றத்தில் மரண தண்டனையை எதிர்த்து மஹஃபரிட் அமிர் கொஸ்ராவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், எவின் சிறைச்சாலையில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

SHARE