யுத்தம் நடைபெற்ற போது இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என குரல் எழுப்பிய அமெரிக்கா, அது சம்பந்தமாக உள்நாட்டு விசாரணையை நடத்த இலங்கை அரசாங்கத்திற்கு உதவி வழங்க தீர்மானித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த தீர்மானம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மின்சார நற்காலிக்கு கொண்டு செல்ல தயார் நிலைகள் இருப்பதாக சில தரப்புகள் சுமத்தி வந்த குற்றச்சாட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியை மின்சார நாற்காலிக்கும், பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை காப்பாற்றிய படையினரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாக சிலர் கூறி வந்ததுடன் கடந்த பல தேர்தல்களில் இதனை அவர்கள் ஒரு துரும்புச் சீட்டாக பயன்படுத்தி வந்தனர்.
அத்துடன் தன்னை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்ல சிலர் முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் பல முறை பகிரங்கமாக கூறியிருந்தார்.
இவ்வாறான நிலையில், அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால், அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அடுத்த செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமை பேரவையில் 30 வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு ஆதரவளிக்கும் யோசனை ஒன்றை அமெரிக்கா கொண்டு வரும் என நிஷா பிஸ்வால் கூறியிருந்தார்.