அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இருந்து 172 பேருடன் லண்டனுக்கு புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ரன்வேயில் ஓடி உயரக் கிளம்பிய வேளையில் திடீரென தீப்பிடித்து எரிந்தால் உள்ளே இருந்த பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள மெக்கேரன் விமான நிலையத்தில் இருந்து (உள்ளூர் நேரப்படி) இன்று மாலை சுமார் 4 மணியளவில் 159 பயணிகள், விமானிகளுடன் சேர்ந்து 13 பணியாளர்கள் என மொத்தம் 172 பேருடன் இங்கிலாந்து தலைநகரமான லண்டன் நோக்கி புறப்பட்டது.
ஓடுபாதையில் சுற்றி வட்டமடித்து வேகம் எடுத்தபோது இடதுபுற என்ஜினில் இருந்து வெளியான திடீர் தீ, விமானத்தின் மையப்பகுதியை பற்றியது. தீ கொளுந்துவிட்டு எரிய புகை மண்டலத்துடன் ஓடுபாதையில் விரைந்த அந்த விமானத்தை கண்ட கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.
தீப்பற்றியதை அறிந்துகொண்ட விமானி உடனடியாக வேகத்தை குறைத்து சில நொடிகளுக்குள் விமானத்தை நிறுத்தினார். சூழ்நிலையை உணர்ந்துகொண்டு அந்த இடத்துக்கு தீயணைப்பு வாகனங்களும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் விரைந்துவந்து சேர்ந்தன.
அவசரக்கால கதவுகள் திறக்கப்பட்டு அவ்விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் ஓடுபாதை தளத்தில் கீழே இறக்கி விடப்பட்டனர். அவசரக்கதவுகள் திறக்கப்பட்டதும், விமானம் பற்றி எரிவதால் உண்டான புகை உள்ளே புகுந்ததால் சில பயணிகள் சுவாசிக்க சிரமப்பட்டு, மூச்சுத்திணறலுக்குள்ளாகினர்.
அதற்குள், விமானத்துக்குள் ஏறிய மீட்புப் படையினர் அனைவரையும் பாதுகாப்பாக கீழே இறக்கி விட்டனர். அதேவேளையில், ஐம்பதுக்கும் அதிகமான தீயணைப்பு படையினர் தீயை சில நிமிடங்களுக்குள் அணைத்து அந்த விமானம் வெடித்து சிதறும் ஆபத்தை தவிர்த்தனர்.
வெளியேற்றப்பட்ட பயணிகள் அனைவரும் பஸ்கள் மூலம் மெக்கேரன் விமான நிலைய கட்டிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த 7 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மாற்று விமானம் மூலம் அவர்களை லண்டனுக்கு அழைத்து செல்லும் ஏற்பாடுகளை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் செய்து வருகின்றது.