சிங்கப்பூர் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலை இடம் பெயர்ந்து வந்தோர் பிரச்சினை, ஓய்வூதிய பிரச்சினை, சீனாவின் பொருளாதார மந்த நிலையால் ஏற்பட்ட தாக்கம் என பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆளும் கட்சி (‘பி.ஏ.பி.’ என்னும் மக்கள் செயல் கட்சி) சந்தித்தது.
1965-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து இடைவிடாமல் ஆட்சியில் இருந்து வரும் மக்கள் செயல் கட்சிக்கு இந்த தேர்தல் ஒரு அக்னி பரிசோதனையாகவே அமைந்தது. ஏனெனில் இந்த தேர்தலில் முதல் முறையாக எதிர்க்கட்சி மொத்தம் உள்ள 89 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது.
ஆனாலும் சிங்கப்பூரின் நிறுவனரான தனது தந்தை லீ குவான் யூ மீது மக்கள் கொண்டுள்ள அபிமானம், நாட்டின் சுதந்திர தின பொன்விழாவால் மக்களிடையே ஏற்பட்டுள்ள தேச பக்தி, தனது கட்சிக்கு அபார வெற்றியை தேடித்தரும் என்ற நம்பிக்கையில்தான் பிரதமர் லீ சியன் லூங், பாராளுமன்றத்தை கலைத்து விட்டு, திடீர் தேர்தல் நடத்தினார்.
ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தம் உள்ள 89 தொகுதிகளிலும் ஓட்டு எண்ணிக்கை முடிந்தது. அதில் ஆளும் கட்சி 89 இடங்களில் 83 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. எதிர்க்கட்சிக்கு வெறும் 6 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
ஆளுங்கட்சிக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் 60.1 சதவீத ஓட்டுக்கள் கிடைத்தன. இந்த தேர்தலில் அது பெருகி, 69.9 சதவீத ஓட்டுக்கள் கிடைத்துள்ளன.
இந்த வெற்றி பிரதமர் லீ சியன் லூங்குக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. தேர்தல் வெற்றி குறித்து அவர் கூறியதாவது:-
நாடு சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் ஆகியுள்ள தருணத்தில் பெற்றுள்ள இந்த வெற்றி, சிங்கப்பூரின் எதிர்காலம் மீது நம்பிக்கையை அளித்து இருக்கிறது. லீ குவான் யூ சகாப்தத்தின் வெற்றிப்பாதையில் பயணம் தொடர்கிறது.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் அரசாங்கம் மக்களின் கவலையைப் புரிந்து கொண்டு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இனி இந்த முயற்சிகள் இரட்டிப்பாகும். நமது தனித்துவமான நிர்வாக அமைப்பின் மூலம் இதை செய்வோம். தேசிய அளவில் மக்களிடம் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி செயல்படுவோம். அரசியலில் தூய்மையைக் கடைப்பிடிப்போம். மக்களின் தேவைகளுக்கு பதில் அளிப்போம். இதற்கான பலத்தை நமது நிர்வாக முறை தருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.