கடல் பகுதியிலும் பாக்., கைவரிசை : இந்திய மீனவர் பலி

549

புதுடில்லி : இதுவரை காஷ்மீர் எல்லைப் பகுதியில் மட்டும் ஊடுருவி, இந்திய படைகள் மற்றும் எல்லைப்புற கிராமப் பகுதிகளில் மட்டும் தாக்குதல் நடத்துவதை பாக், படைகள் வாடிக்கையாக கொண்டிருக்கின்றன. நிலத்தை தொடர்ந்து, தற்போது கடற்பகுதிகளிலும் இந்தியர்கள் மீது பாக், படைகள் தாக்குதல் நடத்தி உள்ளது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது

குஜராத் கடற்பகுதியில் பிரேம்ராஜ், ராம்ராஜ் என்ற இரண்டு இந்திய படகுகளில் 5 இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் மீது பாகிஸ்தான் கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் இந்திய மீனவர் ஒருவர் பலியாகி உள்ளார். உயிரிழந்தவர் இக்பால் அப்துல் என்பது தெரிய வந்துள்ளது. இவர் குஜராத்தின் துவாரகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

பாக்., கடற்படையினரின் இந்த அத்துமீறிய தாக்குதல் தொடர்பாக, இந்திய கடற்படை விசாரணையை துவக்கி உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறையும் தலையிட உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்திய அரசு தரப்பிலோ அல்லது பாக், அரசு தரப்பிலோ எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

SHARE