அமெரிக்காவில் செய்தியாளர்கள் இருவர் கடமையின் போது சுட்டுக்கொலை

295

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் இரு தொலைக்காட்சி செய்தியாளர்கள், கேமரா முன்பாக செய்தி வழங்கிக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.
டபிள்யுடிபிஜே7 என்ற தொலைக்காட்சியைச் சேர்ந்த அலிசன் பார்க்கர் என்ற 24 வயது செய்தியாளரும் அவருடைய ஒளிப்பதிவாளர் ஆடம் வார்ட் என்பவரும் கொல்லப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஒரு நேரலை நிகழ்ச்சியில், திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதையடுத்து அந்தச் செய்தியாளரும் அவருக்குப் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தவரும் ஓடினர்.

இது குறித்து காவல்துறை விசாரணை நடத்திவருகிறது. இது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர் தேடப்பட்டுவருகிறார்.

பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தவர் இதில் தப்பிவிட்டதாக அந்த தொலைக்காட்சி நிலையம் தெரிவித்துள்ளது.

“ஆலிசனும் ஆடமும் இன்று காலையில் சுடப்பட்டவுடன், சிறிது நேரத்தில் அதாவது 6.45 மணியளவில் இறந்தனர். யார் சுட்டவர் என்பதோ காரணம் என்ன என்பதோ தெரியவில்லை” என அந்த நிலையத்தில் பொது மேலாளர் ஜெஃப்ரி மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆலிசன் ஒருவரை பேட்டிகாணத் துவங்கும்போது துப்பாக்கியால் எட்டு தடவை சுடும் சத்தம் கேட்டது. கேமரா கீழே சுழன்று விழுந்தது. அதையடுத்து பலர் கத்தும் சத்தமும் கேட்டது.

ஸ்மித்மவுண்டன் லேக்கிற்கு அருகில் உள்ள ப்ரிட்ஜ்வாட்டர் ப்ளாசா என்ற பெரிய ஷாப்பிங் மையத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது.

SHARE