தீவிரவாதிகள் தாக்குதல்: 80 ஆயிரம் கால்பந்து ரசிகர்கள் தப்பியது எப்படி?

370

 

 

பாரிஸில் கால்பந்து போட்டி நடந்த ஸ்டேட் டி  பிரான்ஸ் மைதானத்தில் நெரிசல் ஏற்பட்டிருந்தால், ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் இறந்து போயிருப்பார்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர்  பாரிஸ்  தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. நேற்று 7 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில், 153 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே மற்றோரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பாரிஸின் அடையாளங்களுள் ஒன்றாக கருதப்படும் ஸ்டேட் டி  பிரான்ஸ் மைதானத்தில் நேற்று உலகச் சாம்பியன் ஜெர்மனி அணியுடன் பிரான்ஸ் அணி நட்பு முறையிலான  கால்பந்து போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தது. போட்டியை காண 80 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

மைதானத்திற்கு வெளியேவும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு போட்டியை ரசித்துக் கொண்டிருந்துள்ளனர். இதில் முக்கியமாக விஷயம் என்னவென்றால், பிரான்ஸ் அதிபர் ஹோலேண்டேவும் இந்த போட்டியை ரசித்துக் கொண்டிருந்ததுதான்.

முதல் பாதி ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, மைதானத்திற்கு வெளியே உள்ள உணவகம் ஒன்றில்  மனித வெடி குண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில்  3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். பின்னர் அதுவே 5 ஆக உயர்ந்தது. இதையடுத்து ஸ்டேடியத்தை போலீசார் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.அதிபருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக அவர் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கால்பந்து மைதானத்தில்தான் வெடிகுண்டு வைக்க  தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனாராம். ஆனால் போட்டியை காண பிரான்ஸ் அதிபரும் வந்திருந்ததால்,பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், தீவிரவாதிகளின் நோக்கம் நிறைவேறவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு வேளை மைதானத்திற்குள் இது போன்று அசம்பாவிதம் நடந்தால்,கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கும். நெரிசலில் சிக்கி  ஆயிரக்கணக்கான  ரசிகர்கள் பலியாகியிருப்பார்கள்.

போட்டி முடிந்ததும் மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப்பட்டனர். நெரிசல் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக போலீசார் பலத்த ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதோடு ஸ்டேடியத்தின் மத்தியில் உள்ள மைதானத்தில் ரசிகர்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தனர்.

உலகச் சாம்பியன் ஜெர்மனி அணி இந்த போட்டியில் 2- 0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. பிரான்ஸ் அணிக்காக ஓலிவர் ஜிரார்ட் 45வது நிமிடத்திலும் ஜிக்னக் 86வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். போட்டி முடிந்ததும் ஜெர்மனி அணி வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் ஹோட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

SHARE