உலக நாடுகளை இணைந்து ஐ.எஸ் தீவிரவாதத்தை ஒழிப்போம்! ஒபாமா சூளுரை

291
தற்போது அச்சுறுத்தலாக மாறியுள்ள ஐ.எஸ் தீவிரவாதத்தை முற்றாக ஒழிப்போம் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சூளுரைத்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பெர்னாடினோ நகரில் பாகிஸ்தான் அமெரிக்க தம்பதி சையத் ரிஷ்வான் பரூக்-தஸ்பீன் ஆகியோர் சமீபத்தில் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய தம்பதியினர், தமது ஆதரவாளர்கள் என ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் தெரிவித்தனர். அவர்கள் வீட்டில் நடத்திய சோதனையில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மூளைச் சலவை மூலம் இவர்கள் தீவிரவாத தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் நாட்டு மக்களுக்கு வெள்ளை மாளிகையிலிருந்து அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று உரையாற்றினார்.
கலிபோர்னியா துப்பாக்கி சூடு சம்பவம், அப்பாவிகளை கொல்வதற்காக நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல். தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது உண்மைதான். கடந்த சில ஆண்டுகளாக புதுவித தீவிரவாத அச்சுறுத்தல் எழுந்துள்ளது.
நாடுகள் இடையேயான தூரத்தை இன்டர்நெட் குறைத்துள்ளதால் ஐ.எஸ் போன்ற அமைப்புகள் வலுவடைந்துள்ளன. பாஸ்டன் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், சான் பெர்னாடினோ துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் போல், சிலரின் மனதை தீவிரவாதிகள் விஷமாக்கும் முயற்சி அதிகரித்துள்ளதை நாம் பார்க்கிறோம்.
இந்த புதுவித அச்சுறுத்தலும் முறியடிக்கப்படும். நம் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கும் ஐ.எஸ். அல்லது எந்த அமைப்பாக இருந்தாலும் அவர்களை நாம் ஒழிப்போம்.
இந்த முறை வலுவான, சாதுரியமான நடவடிக்கை மூலம் விரைவில் வெற்றி பெறுவோம். ஈராக்கிலோ அல்லது சிரியாவிலோ நம் ராணுவத்தை இறக்கி நீண்ட மற்றும் அதிக செலவு மிக்க போரில் நாம் ஈடபடக் கூடாது. ஆனால் அதைத்தான் ஐ.எஸ் போன்ற அமைப்புகள் விரும்புகின்றன.
போர்க்களத்தில் நம்மை வீழத்த முடியாது என அவர்களுக்கு தெரியும். நாம் சந்தித்த ஈராக் போரிலேயே அவர்கள் தீவிரவாத அமைப்பின் ஒரு பங்காக இருந்தவர்கள். நாம் அன்னிய மண்ணில் இருந்தால், தீவிரவாதத்தை பல
ஆண்டுகளாக நீட்டிக்க முடியும் என்பது அவர்களுக்கு தெரியும். இதை காரணமாக வைத்தே, அவர்கள் தங்கள் இயக்கத்துக்கு ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபடுவர்.
இந்த முறை நாம் மேற்கொள்ளும் யுக்தி, வான் தாக்குதல், சிறப்பு படைகள் மற்றும் உள்ளூரில் ஐ.எஸ் தீவிரவாதிகளை எதிர்த்து போரிடும் அமைப்பினருடன் இணைந்து செயல்படுவது போன்றவைதான்.
இந்த நடவடிக்கை மூலம்தான் நாம் வெற்றி பெற போகிறோம். இதற்கு நமது புதிய தலைமுறை அமெரிக்கர்கள் அன்னிய மண்ணில் களம் இறங்கி ஆண்டு கணக்கில் போரிட்டு மடிய தேவையில்லை.
ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒழிக்கும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையில் 65 நாடுகள் இணைகின்றன. இதற்கான திட்டங்களை அமெரிக்க இராணுவ தளபதிகள், தீவிரவாத ஒழிப்பு வல்லுனர்களும் வகுத்து வருகின்றனர். தற்போது ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ் தலைவர்கள் மற்றும் அவர்களின் இருப்பிடங்கள், எண்ணெய் கிடங்குகள் மீது வான் தாக்குதல் நடந்து வருகிறது என அவர் தெரிவித்தார்.
SHARE