பிரித்தானியாவின் கிரேட்டர் லண்டன் பகுதியில் சாலையின் நடுவே அமர்ந்து பெண்மணி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் லண்டனில் உள்ள Greenford பகுதியில் அமைந்துள்ள சாலையில் பாலத்தை கடக்கும் பொருட்டு ஏராளமான வாகனங்கள் வரிசையாக சென்றுகொண்டிருந்தன. ஆனால் வாகனங்கள் அனைத்தும் வேகம் குறைவாகவும் நிதானமாகவும் செல்வதை கண்ணுற்ற இருச்சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் காரணம் என்னவென வினவியுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது பாலத்தின் அருகாமையில் சாலையின் நடுவே பெண்மணி ஒருவர் முகம் மறைத்தபடி தலை கவிழ்ந்து படுத்திருப்பது அவருக்கு தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த பெண்மணியின் அருகே வந்த அந்த நபர், அவரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி, காரணம் என்னவென தெரிந்துகொள்ள முயன்றுள்ளார். சாலை நடுவே பெண்மணி ஒருவர் படுத்திருப்பதை கண்டும் கவனியாமல் சென்ற வாகன ஓட்டிகளை கடிந்துகொண்ட அந்த நபர், அந்த பெண்மணிக்கு தண்ணீர் தருவித்து, சாலையில் படுத்திருப்பது ஏன் என வினவியுள்ளார், ஆனால் காரணம் எதுவும் கூற மறுத்த அந்த பெண்மணி, தற்கொலை செய்துகொள்ள அனுமதியுங்கள் என மட்டும் கேட்டுள்ளார். இதனிடையே வாகன ஓட்டிகளில் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் அவசர ஊர்தியை வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்பகுதி வழியே கடந்து சென்ற வாகன ஓட்டிகள் அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்த்து சென்றதாகவும், ஏன் ஒருவரும் அந்த பெண்மணிக்கு உதவ முன்வரவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். |