திருமணமான 6 மாதத்தில் கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, மண்எண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை

311

 

திருமணமான 6 மாதத்தில் கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, மண்எண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்த கர்ப்பிணி மனைவியை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் வேலை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருப்பாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 31). இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். இவருக்கும், சிலாமேகவளநாடு பகுதியைச் சேர்ந்த ரேகா (23) என்பவருக்கும் 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு முன்னர் ரேகா 5 வருடங்களாக சென்னை அமைந்தகரையில் ஒரு பாத்திரக்கடையில் வேலைபார்த்தார். அப்போது அருகே உள்ள ஒரு டிராவல்சில் டிரைவராக வேலைபார்த்த திண்டுக்கல்லை சேர்ந்த குட்டி என்பவருக்கும், ரேகாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

கட்டாய திருமணம்

ரேகாவின் வீட்டில் அவருக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்தபோது, தனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என ரேகா கூறிவந்தார். ஆனால் அவருடைய பெற்றோர் கட்டாயப்படுத்தி, ரேகாவை மகேஸ்வரனுக்கு திருமணம் செய்துவைத்தனர். இதனால் கணவன்–மனைவி இடையே ஆரம்பம் முதலே கருத்துவேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி பிரச்சினைகள் எழுந்தன.

இதற்கிடையே ரேகா கர்ப்பமானார். மகேஸ்வரன் மலேசியாவிற்கு சென்றுவிட்டு, தற்போது பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு வந்தார். அப்போது மீண்டும் கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு மகேஸ்வரன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.

தீவைத்து எரித்தார்

அப்போது அவருக்கு பாலில் தூக்க மாத்திரையை கலந்து ரேகா கொடுத்துள்ளார். இது தெரியாமல் குடித்துவிட்டு மகேஸ்வரன் படுத்து இருந்தார். அப்போது ரேகா, மகேஸ்வரன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு வெளியே சென்று கதவை பூட்டிவிட்டார்.

உடல் முழுவதும் தீ மளமளவென பற்றி எரிந்ததில் மகேஸ்வரன் அலறித்துடித்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்கள் கதவைத் திறந்து உள்ளே சென்று உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த மகேஸ்வரனை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.

மனைவி கைது

ஆஸ்பத்திரியில் மகேஸ்வரன் சிகிச்சை பலனின்றி இறந்தார். தேவகோட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியபோது ரேகா இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SHARE