வெள்ளியன்று ஐ.நா. ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கை வருகிறார்!

315

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசேன் வட மாகாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளதுடன் சனிக்கிழமை மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்தவுள்ளார்.

எதிர்வரும் 9ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் செய்ட் அல் ஹுசேன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட தரப்பினருடனும், சிவில் சமூக பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அத்துடன் கடந்த செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செய்ட் அல் ஹூசேன் மதிப்பீடுகளை செய்யவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

வௌ்ளிக்கிழமை இரவு இலங்கை வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செய்ட் அல் ஹூசேன் சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அங்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ள அல் ஹுசேன் யுத்தத்துக்குப் பின்னரான நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவார்.

அத்துடன் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்ளை சனிக்கிழமை செய்ட் அல் ஹுசேன் சந்தித்து கலந்துரையாடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் சந்திப்புக்களை முடித்துவிட்டு கொழும்பு திரும்பவுள்ள செய்ட் அல் ஹுசேன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

இதன்போது உள்ளக விசாரணை பொறிமுறை மற்றும் சர்வதேசத்தின் பங்களிப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.

விசேடமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30வது கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பாகவும், வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் இந்த சந்திப்பின் போது விரிவாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை சனிக்கிழமை இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் செய்ட் அல் ஹுசேன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின் போது விசாரணை பொறிமுறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

உள்ளக விசாரணை பொறிமுறை சர்வதேச நீதிபதிகளை எக்காரணம் கொண்டும் இணைத்துக் கொள்ள மாட்டோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை விஜயம் இடம்பெறவுள்ளது.

எவ்வாறெனினும் உள்ளக விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதா? இல்லையா என்பது தொடர்பில் இதுவரை அரசாங்கம் தீர்மானம் எடுக்கவில்லை.

இது தொடர்பில் அரசாங்கம் தற்போது ஆழமான முறையில் ஆராய்ந்து வருகிறது.

அந்த வகையில் விரைவில் இது குறித்த தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கும் என்று நீதியமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்ச கடந்தவாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE