முக்கொலையும் எனது கணவரே செய்தார்; மனைவி பரபரப்பு வாக்கு மூலம்.

464

தனது கணவனே முக்கொலையையும் செய்ததாகவும், அதனைத் தடுக்கச் செல்லும் போதே தன்னையும் வெட்டியதாக முக்கொலைகளைச் செய்தவரின் (தனஞ்சயன்) மனைவியான தர்மிகா, மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்று (13) தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த நபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா, வெள்ளிக்கிழமை (13) உத்தரவிட்டார்.

யாழ்.அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் மே மாதம் 4ஆம் திகதி அதிகாலை ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர். அத்துடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

நிக்குநானந்தன் அருள்நாயகி (50), யாசோதரன் மதுசா (27), நிக்குநானந்தன் சுபாங்கன் (19) ஆகிய மூவரும் பலியாகியிருந்ததுடன், தனஞ்செயன் தர்மிகா (25), க.யசோதரன் (30) ஆகிய இருவரும் படுகாயமடைந்திருந்தனர். இந்தக் கொலை தொடர்பில் படுகாயமடைந்த தர்மிகாவின் கணவரான பொ.தனஞ்செயன் ஊரெழு பகுதியில் வைத்து கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தர்மிகாவின் சகோதரியும் இந்த வாள்வெட்டில் பலியாகியிருந்தவருமான மதுசாவினை இரண்டாவதாகத் திருமணம் செய்ய முடியாத நிலையிலே குறித்த நபர் (தர்மிகாவின் கணவர்) மேற்படி படுகொலையினைச் செய்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தர்மிகா இன்று (13) நீதிமன்றில் ஆஜராகி தனது முதலாவது சாட்சியத்தினைப் பதிவு செய்தார்.

SHARE