மாணவனின் உயிரை பறித்த செல்ஃபி தண்டவாளத்தில் நடந்த விபரீதம்!

262

மின்சார ரயில் வரும்போது தண்டவாளத்தின் அருகே நின்று செல்ஃபி எடுக்க முயன்ற பிளஸ்–1 மாணவர் ரயில் மோதி பலியான சம்பவம் சென்னை வண்டலூரில் நிகழ்ந்துள்ளது.

சென்னை பூந்தமல்லி ஜேம்ஸ் தெருவைச் சேர்ந்த சுகுமாரன் என்பவரின் மகன் தினேஷ். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று விடுமுறை நாள் என்பதால் தனது நண்பருடன் தினேஷ் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து மாணவர் தினேஷ் நண்பருடன் மாலை 5 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். அவர்கள் 2 பேரும் வண்டலூர் ரயில் நிலைய தண்டவாளம் அருகே நடந்து வந்துள்ளனர்.

அப்போது சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டை நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்துள்ளது. அந்த நேரத்தில் தண்டவாளம் அருகே சென்ற மாணவர் தினேசுக்கு ரயில் தன்னை கடந்து செல்லும் காட்சியை செல்ஃபி படம் எடுக்கும் விபரீத ஆசை ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தினேஷ் அவசர, அவசரமாக தண்டவாளம் அருகே நின்று கொண்டு செல்போனில் செல்ஃபி படம் எடுக்க முயன்றுள்ளார். அந்த நேரத்தில் வேகமாக வந்த மின்சார ரயில் அவர் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் உடல் சிதறி மாணவர் தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தாம்பரம் ரயில்வே காவல்துறையினர் விரைந்து சென்று தினேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அண்மை காலமாக மலைகள், கடல், தண்டவாளங்களில் நின்று செல்ஃபி எடுக்கும் மோகத்தில் உயிரிழப்பு சம்பவம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE