முதியவர்கள் போல தோற்றமளிக்கும் சிறுவர்கள்

273
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் உள்ள 2 சிறுவர்கள் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு முதியவர்கள் போல் தோற்றமளிக்கின்றனர்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி எனும் பகுதியில் குடியிருந்து வருபவர் 40 வயதான ஷத்ருகன் ரஜக், இவரது 2 குழந்தைகள், பிறந்து 18 மாதங்களேயான கேஷவ் குமார் மற்றும் 7 வயதான அஞ்சலி குமாரி ஆகிய இருவரும் விசித்திர நோயால் தாக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் முதியவர்கள் போன்று சுருக்கங்கள் விழுந்த தோலுடன், உப்பிய முகத்துடன், முதியவர்களுக்கு ஏற்படும் உடல் வலியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் இவர்கள் இருவரது சகோதரியான 11 வயது ஷில்ப்பி என்பவருக்கும், தாய் தந்தைக்கும் இதுபோன்று எவ்வித குறைபாடும் இல்லை என கூறப்படுகிறது.

இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் இந்த நோய்க்கான சிகிச்சை எதுவும் நடைமுறையில் இல்லை என தெரிவித்துள்ளதாக கூறும் இந்த குடும்பத்தினர், பொதுமக்களின் தேவையற்ற பேச்சுக்களும் கிண்டல்களும் தங்களை மிகவும் வருத்தமடைய செய்வதாக தெரிவித்துள்ளனர்.

Progeria எனப்படும் இந்த விசித்திர நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி மிக விரைவில் நடைபெறுவதால் அவர்கள் 13 வயதினை தாண்டுவதில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகில் 4 மில்லியன் பேரில் ஒருவர்தான் இதுபோன்ற அரிய வகை நோயால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பிறக்கும் போது மிகவும் ஆரோக்கியத்துடன் இருக்கும் இந்த குழந்தைகள், பிறந்த முதல் ஆண்டிலேயே நோயின் அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனர்.

இந்த நோயால் பாதிக்கப்படும் குழந்தைளுக்கு தலை மற்றும் கண்கள் பெரிதாகவும், உடம்பின் நரம்புகள் புடைத்து காணப்படும், அதிக அளவு முடி உதிர்தலும் ஏற்படும்.

தமது குழந்தைகள் குறித்து மிகவும் கவலை கொண்டுள்ள ஷத்ருகன், இந்த அரியவகை நோயில் இருந்து குழந்தைகள் விடுபடும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

SHARE