விடைகாண முடியாமல் நீடிக்கும் மர்மம்

288
ரஷ்யாவில் ஒரு மலைசார்ந்த பகுதியில் உள்ளது தர்காவ்ஸ் என்ற அந்த மர்ம நகரம், இன்னும் ரஷ்யாவினராலே விடைகாண முடியாத நெடிய புதிராக விளங்குகிறது.வாழ்பவர்கள் யாரும் இப்போது இல்லை, அங்கு காணப்படும் ஒரேமாதிரியான கட்டட அமைப்பு, வாழ்ந்தவர்கள் வீடுகளா, அல்லது கல்லறைகளா தெரியவில்லை, அவற்றில் எழும்புகளும் மண்டை ஓடுகளும் மட்டுமே மிச்சங்களாக கிடக்கின்றன.

புதிருக்குள் சில புரிதல்கள்

கணிசமான மக்களோடு இயங்கிக்கொண்டிருந்த இந்த ஊர் ஏன் காலாவதியானது? கடைசி உயிரை எப்போது பறிகொடுத்தது. தனது முழு சுவாசத்தை முடித்துக்கொண்ட இந்த நகரம் எப்படி வாழ்ந்தது?

இந்த காகசஸ் மலைப்பகுதியில் புரியாத புதிராக ஆய்வுகளுக்கு பிறகும் காரணம் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர்.

அங்கு காணப்படும் 100 க்கும் மேற்பட்ட பிரமிட் அமைப்பிலான சிறுகல்லறைகள் அங்கு வாழ்ந்த மக்கள், தங்கள் அன்புக்குரியவர்கள் இறந்ததற்கு அடையாளமாகவும் கட்டியிருக்கலாம்.

அதேசமயத்தில் அங்கு மரணித்த எல்லோருக்கும் இப்படி கல்லறை உருவாகியிருக்க வாய்ப்பில்லை.

இந்த காகசஸ் மலைப்பகுதியை ஒட்டி வாழும் ஊர்மக்கள், இந்த பகுதியை பற்றி சில வதந்திகளையும் கட்டுக்கதைகளையும் தங்கள் மக்களிடம் ஏற்படுத்தியிருந்தனர்.

அதன் விளைவாக, அங்கு சென்றால் யாரும் உயிருடன் திரும்பி வரமுடியாது என நம்பப்பட்டது.

அந்த பயத்தின் காரணமாக யாரையும் அங்கு செல்ல அனுமதிப்பதில்லை. அதன் காரணமாக அருகாமையில் வாழ்ந்தவர்களுக்கு கூட அங்கு என்ன நடந்தது என தெரியாமல் போனது.

தொல்லியல் ஆய்வுப்படி 16 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த நகரம் முற்றிலும் இடுகாடாக மாறியிருக்கிறது.

இறந்த நகரத்தின் இருப்பிடம்

தர்காவ்ஸ் ஊர் தெற்கு ரஷ்யாவில் உள்ள வடக்கு ஒசேத்தியா குடியரசில் அமைந்துள்ளது. இங்கிருந்து ஆபத்து மற்றும் முறுக்கலான சாலைகளில் மூன்று மணிநேரம் பயணிக்க வேண்டும்.

இது மலைக்கு இடையிலான பள்ளத்தாக்கின் ஒரு சரிவில் கண்டும் காணாததுபோல, அமைந்துள்ளது. இதற்கு கீழ்பகுதியில் பியக்டோன் ஆறு ஓடுகிறது.

இந்த கிராமம் அமைந்துள்ள சரிவின் மேற்பகுதி 17 கி.மீ. உயரமுள்ள மலை சிகரம்.

நிலமின்றி குடியேறியவர்களா?

புல்தரையுள்ள மலைப்பகுதியில்தான் இந்த இடைக்கால கிராமத்தின் வீடுகள் உள்ளன. சிறுவாசலுடைய அந்த வீட்டில் ஒரு மனிதரைக்கூட இப்போது உயிரோடு பார்க்க முடியவில்லை.

இந்த பகுதியில் காணப்படும் முதல்குறிப்பு 14 ம் நூற்றாண்டின் முற்பகுதியை சேர்ந்ததாக உள்ளது. கிழக்கு ஒசேத்தியாவில் நிலம் விலைமதிப்புடையதாக இருந்து.

அதனால், வசதியற்ற ஒரு பகுதியினர் இங்கு வாழ தள்ளப்பட்டிருக்கலாம்.

வாழும் வசதிக்குரிய சரியான சூழல் இல்லாமல் படிப்படியாக அவர்கள் அழிந்திருக்கலாம். அங்கு காணப்படும் எலும்புகளும் மண்டை ஓடுகளும் பல நூற்றாண்டுகளுக்கு முன் இறந்தவர்களுடையது.

புதைகுழியில் படகு, துடுப்பு, நாணயங்கள்

புதைக்கப்பட்ட உடல்களுக்கு அருகே துடுப்பு, படகு போன்ற மரத்தாலான பொருளும் நாணயங்களும் வைக்கப்பட்டுள்ளது.

இது எகிப்து, மெஸபடோமிய மக்கள் நம்பிக்கைபோல, இறந்த பிறகு சொர்க்கத்திற்கு ஆற்றை படகில் கடந்து செல்லவேண்டும், சொர்க்கத்துக்கு பணம் கொடுத்து செல்லலாம் என்ற நம்பிக்கையை இங்கு வாழ்ந்தவர்கள் பின்பற்றி இருப்பது தெரிகிறது.

இந்த கிராமத்தின் அருகில் ஆறு ஓடுவதால் இவர்கள் மீன்பிடிக்கும் தொழில் செய்தும் வாழ்ந்திருக்கலாம்.

வெளியுலகின் தொடர்பில்லாமல் இவர்கள், தோன்றி வாழ்ந்து அழிந்திருக்க முடியாது, இவர்களை அறிந்தவர்களும் அழிந்திருக்கலாம்.

ஆனாலும், வரலாறு இல்லாமல் போனாலும், ஒரு புதிராக நின்றார்கள்.

-மரு.சரவணன்

SHARE