ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சிரியாவிலிருந்து தனது நாட்டுப் படையினரை வாபஸ் பெற அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதன் பிரகாரம் முதலாவது தொகுதி ரஷ்ய படையணி சிரியாவிலுள்ள ரஷ்ய ஹமெயிமிம் படைத்தளத்திலிருந்து செவ்வாய்க்கிழமை தாய்நாட்டுக்குப் புறப்பட்டது.
சிரியாவிலான ரஷ்ய தலையீட்டிற்கான நோக்கங்கள் பெருமளவில் எட்டப்பட்டதையடுத்தே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளாடிமிர் புட்டின் கூறினார்.
இந்நிலையில் சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத் ரஷ்யாவின் மேற்படி நகர்வுக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அவரது அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யாவானது சிரியாவில் கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்திலிருந்து வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
மேற்படி தாக்குதல்களானது அந்நாட்டிலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளையும் ஏனைய தீவிரவாதக் குழுக்களையும் இலக்காகக் கொண்டது என ரஷ்யா வலியுறுத்தி வந்த நிலையில், அந்தத் தாக்குதல்கள் அந்நாட்டு ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் வகையில் அவருக்கு எதிராக செயற்பட்டு வரும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வருவதாக ஏனைய நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.