போரில் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான முழுமையான கணக்கெடுப்பு ஒன்றை அரசாங்கம் நடத்த வேண்டும்

353

 

மூன்று  தசாப்தங்களாக  நீண்ட  விடுதலைப்  புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து  மே 18  மாதத்தோடு நான்கு ஆண்டுகளாகி விட்டன.

2009 மே 19ம் திகதி   காலை  நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் வெற்றியை அறிவித்திருந்தார்   மகிந்த ராஜபக்ச. இந்த மூன்று   தசாப்த காலப் போரினால்  இலங்கைக்கு  ஏற்பட்ட இழப்புகள்  எவ்வளவு   என்ற துல்லியமான கணக்கு ஏதும் இன்று வரை இல்லை. நவீன வசதிகள் எல்லாம் இருந்த போதிலும், இந்தப் போரினால் ஏற்பட்ட பாதிப்புகள், அழிவுகள் குறித்த புள்ளிவிபரங்கள் ஏதும் இல்லாதிருப்பது- இது எந்தளவுக்கு கோரமானதாக இருந்துள்ளது  என்பதற்கான சாட்சியாக எதிர்காலத்தில் விளங்கும்.

கிட்டத்தட்ட 26 ஆண்டு காலம் நீடித்த ஆயுதப் போரில் 200 பில்லியன் டொலர் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டதாக ஆசிய பொருளாதார நிறுவகம் 2011இல் வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தது. இது போர் முடிவுக்கு வந்த ஆண்டான 2009ம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விடவும் ஐந்து மடங்கு அதிகமானது.

போரினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கள் குறித்த ஒரு பருமட்டான தகவலாகவே இது இருந்தாலும், இந்தப் போரில் உயிர்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் சேதங்கள் பற்றிய மதிப்பீடு ஒன்றும்  சரியாக மேற்கொள்ளப்படவில்லை.  “ஆயிரக்கணக்கான  உயிர்களைப் பலியெடுத்த உள்நாட்டுப் போர்” அல்லது   “ஒரு இலட்சம் பேர் வரை கொல்லப்பட்ட போர்” என்று  ஊடகங்களிலும்  அறிக்கைகளிலும் அடைமொழிப்படுத்தப்பட்டாலும், இந்தப் போரில், கொல்லப்பட்ட பொதுமக்கள் எத்தனை பேர், காயமடைந்தவர்கள்  எத்தனை பேர், காணாமற்போனவர்கள் எத்தனை பேர் என்ற முறையான தகவல் ஏதும் கிடையாது.

அதுபோலவே போரில் ஈடுபட்ட அரசபடைகள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தெளிவான மதிப்பீடுகளோ அல்லது முரண்பாடுகள் சந்தேகங்கள் இல்லாத ஒரு புள்ளிவிபரமோ இதுவரை வெளியாகவில்லை.

நான்கு கட்டங்களாக நீடித்த இலங்கை அரசபடைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் மற்றும் சுமார் இரண்டரை ஆண்டுகள் வரை நீடித்த இந்திய அமைதிப்படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் ஆகியவற்றின் போது பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். காயமடைந்தனர், காணாமற்போயினர்.

பொதுமக்களின் இந்த மரணங்களில் தற்செயலானவை, திட்டமிட்டவை, ஆத்திரத்தில் பழிவாங்கும் நோக்கம் கொண்டவை என்று எல்லாமே உள்ளடங்குகின்றன. ஒருவகையில் சொல்லப் போனால், இந்தப் போர், நீதிக்குப் புறம்பான கொலைகளின் களமாகவே இருந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

போர்களின் போது போர் தொடர்பான நீதியைக் கடைப்பிடிக்க வேண்டும்  என்று சர்வதேச சட்டவரையறைகள் இருந்தாலும், அவை ஒன்றும்   நடைமுறைக்கு சாத்தியப்படுவதில்லை. சுவீடனின்  உப்சலா   பல்கழலைக்கழகம் சார்பில் உப்சலா முரண்பாட்டு புள்ளிவிபர  திட்டம் மேற்கொண்ட   ஒரு ஆய்வின் முடிவில், வெளியிடப்பட்ட    அறிக்கையின் படி, 1990 தொடக்கம் 2009 வரையான   காலப்பகுதியில்   59,193 இற்கும் 75,601 இற்கும் இடையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது இரண்டாம், மூன்றாம், நான்காம் கட்ட ஈழப்போர்களில் ஏற்பட்ட இழப்புகள் மட்டுமேயாகும். முதலாம்கட்ட ஈழப்போரிலோ, இந்தியப் படையினரின் காலத்திலோ பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் இதில் சேர்க்கப்படவில்லை.

போரில் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான முழுமையான கணக்கெடுப்பு ஒன்றை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று நல்லிணக்க ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் அதனை அரசாங்கம் முழுமையாக மேற்கொள்ளவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கம் செயற்படு நிலையில், இருந்தவரை, தமது பக்கத்தில் ஏற்பட்ட இழப்புகளின் விபரங்களை அவ்வப்போதும், ஆண்டுதோறும் மாவீரர் நாளின் போது விரிவான பட்டியலாகவும் வெளியிட்டு வந்தது.


கடைசியாக 2007 மாவீரர் நாளின் போது விடுதலைப் புலிகளால் ஆண்டுவாரியாக உயிரிழந்த புலிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டன. அதன்படி 1982ம் ஆண்டு தொடக்கம் 2007ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வரையான காலப்பகுதியில்  விடுதலைப் புலிகள் தரப்பில் கொல்லப்பட்டவர்களின்   அதிகாரபூர்வ எண்ணிக்கை 19,792 பேராகும். 2008 இல் உயிரிழந்த புலிகள் 1186 பேரின்  தகவல்கள் இணையங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்த்தால், 20,978.ற்கும் அதிகமான புலிகள் 2008 காலப்பகுதி வரை உயிரிழந்துள்ளனர்.

2007 ஒக்ரோபருக்குப் பின்னர், புலிகளுக்கு கணிசமான ஆளணி இழப்புகள் ஏற்பட்டன. ஆனால், அதுபற்றிய விபரங்களை அவ்வப்போது அவர்கள் வெளியிட்டிருந்தாலும், முழுமையான பட்டியல் தரவுகளை வெளியிடவில்லை. போர் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்ததால் துல்லியமான தகவல்களை திரட்டுவதில் சிரமங்கள் இருந்திருக்கலாம். அல்லது அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்டதை ஒப்புக்கொள்ளும் போது அது உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அதை வெளியிடாமல் தவிர்த்திருக்கலாம்.

எனினும் 2009 ஏப்ரல் மாத தொடக்கத்துக்குப் பின்னர், விடுதலைப் புலிகள் இயக்கம் கிட்டத்தட்ட முடக்க நிலையை அடையத் தொடங்கி விட்டதால், அதற்குப் பின்னர் போரில் கொல்லப்பட்ட மூத்த தளபதிகளின் விபரங்களைக் கூட முறைப்படி அறிவிக்க முடியாத நிலையை அடைந்திருந்தது.

இறுதிக்கட்டப் போரில், நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் அதுவும் சரியான துல்லியமான புள்ளிவிபரங்கள் கிடையாது. அதேவேளை, அரசாங்கம் கூறுகின்ற தகவல்களின் படி பார்த்தால், அது மிகப்பெரியதாக – விடுதலைப் புலிகளின் ஆளணிப் பலத்தை விஞ்சிய தொகையாகவே அது இருந்தது.

26 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தின் போது அரசபடைகள் வெளியிட்ட புலிகளின் உயிரிழப்பு பற்றிய தகவல்களுக்கும், விடுதலைப் புலிகள் வெளியிடும் அதிகாரபூர்வ தகவல்களுக்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடுகள் இருந்தன. விடுதலைப் புலிகள் 2008ம் ஆண்டு வரை தமது இழப்புகள் தொடர்பான தகவல்களில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடித்தனர் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.

விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்போர் எவருமே, போரில் கொல்லப்பட்ட போராளிகளின் தொகையை புலிகளின் தலைமை மறைத்து விட்டதாகேவோ, குறைத்துக் கூறியதாவோ ஒருபோதும் கூறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, விடுதலைப் புலிகளின் இழப்புகள் தொடர்பாக படைத்தரப்பு எப்போதும் மிகைப்படுத்தியே தகவல்களை வெளியிட்டு வந்தது. அதனை போரின் போது கடைப்பிடிக்கப்பட்ட ஒரு உளவியல் நடவடிக்கையாகவும் குறிப்பிடலாம்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, 2006 ஓகஸ்ட் மாதம் மாவிலாறில் நான்காவது கட்ட ஈழப்போர் தொடங்கியதில் இருந்து, 2009 மே 18 இல் போர் முடிவுக்கு வந்தது வரையான காலப்பகுதியில் 22,247 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும்,   இவர்களில் 11,812 பேரின் பெயர் விபரங்கள் அடையாளம்  காணப்பட்டதாகவும் இராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டது என்பதே பொதுவான கருத்து.  ஏனென்றால், 2006 – 2007 காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் சுமார் 2000 பேர் வரையே இழந்துள்ளதாக அவர்களின் அதிகாரபூர்வ கணக்குகள் காட்டுகின்றன.  எஞ்சிய சுமார் ஒன்றரை ஆண்டுகளில் மோசமான போர் நடந்திருந்தாலும், சராசரியாக நாளொன்றுக்கு 35 பேர் வீதம் புலிகள் தரப்பில் கொல்லப்பட்டிருக்கவில்லை.

எவ்வாறாயினும், இறுதிக்கட்டப் போர் பேரழிவுகள் மிக்கதாக இருந்ததால், விடுதலைப் புலிகள் தரப்பில் 1982 தொடக்கம் 2009 வரையான காலத்தில் குறைந்தது 25 ஆயிரம் பேராவது உயிரிழந்திருக்கலாம் என்பது பொதுவான கணிப்பாக உள்ளது. எனினும்  இந்த எண்ணிக்கை ஒருபோதும் 30 ஆயிரத்தை தாண்டியிருக்க வாய்ப்பில்லை. விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டதால், அவர்கள் தரப்பிலான, போரின் இறுதிக்கட்டம் பற்றிய எல்லாத் தரவுகளும் அழிந்து போய் விட்டன.

ஒரு போரில் தோற்கடிக்கப்படும்  எந்தத் தரப்புமே, வரலாற்று ரீதியாக எதிர்கொள்ளும் பாரிய பின்னடைவு இது. அதனை விடுதலைப் புலிகளும் சந்தித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் தரப்பில் போரின் இறுதியில் உயிர் தப்பியவர்கள் யார், கொல்லப்பட்டவர்கள் யார், அவர்கள் எப்படிக் கொல்லப்பட்டனர் என்ற எந்த விபரமுமே கிடையாது. புலிகளின் பல முக்கியஸ்தர்கள்,   தளபதிகளுக்கு என்ன நேர்ந்தது என்ற விபரங்களும் இல்லை. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தளபதிகள் சூசை, ஜெயம், பானு உள்ளிட்ட பலர்  இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டதற்கான  ஒளிப்பட ஆதாரங்களை அரசாங்கம் வெளியிட்டது.

அதற்கு முன்னரே தீபன், மணிவண்ணன், சொர்ணம், சசிகுமார், கடாபி, விதுசா, துர்க்கா போன்ற விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் போரில் கொல்லப்பட்டு விட்டனர். ஆனாலும், புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானின் சடலம் கடைசிவரை படையினரிடம் கிடைக்கவில்லை. எனினும் அவர் இறந்து விட்டார் என்று உறுதியாக சொல்கிறது படைத்தரப்பு.  அதேவேளை, இறுதிப் போரில் உயிர் தப்பி காடுகளில் இருந்த புலிகளின் தளபதிகளுக்கும், சரணடைந்தவர்களில் பலருக்கும் என்ன நிகழ்ந்தது என்ற மர்மமுடிச்சு இன்னமும் அவிழவேயில்லை.

இந்த நீண்ட போரில் அரசபடையினர் எவ்வளவு பேர் உயிரிழந்தனர் என்ற விபரம் கூட சரியாக இல்லை.

அரசாங்கம் போரில் வென்றுள்ள போதிலும், அதன் வசம் எல்லா ஆவணங்களும் அழியாமல் உள்ள போதிலும், துல்லியமான விபரங்களை வெளியிடத்தக்க நிலையில் இருந்த போதிலும், தெளிவான புள்ளிவிபரத்தை வெளியிடத் தவறியுள்ளது படைத்தரப்பு. போர் முடிவுக்கு வந்த பின்னர், அரசாங்கத் தரப்பில் படையினரின் மரணங்கள், காயங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட பல்வேறு புள்ளிவிபரங்கள் இங்கு ஆய்வுக்காக எடுக்கப்பட்ட போது, அவற்றுக்கிடையில் குழப்பங்கள், முரண்பாடுகள் இருந்ததை அவதானிக்க முடிந்தது.

இந்த முரண்பாடுகள் ஒரு விடயத்தை தெளிவுபடுத்துவதாக உள்ளது. அதாவது, இந்த நான்கு கட்ட ஈழப் போர்களிலும் அரசபடைகள் துல்லியமான தரவுகளை பேணும் வசதிகளைக் கொண்டிருந்த போதிலும், அதைச் சரிவரச் செய்யவில்லை என்பதே உண்மை.

போரின் போது படைத்தரப்பு உண்மையான இழப்புகள் பற்றிய தரவுகளை மறைப்பதாக எப்போதும் விடுதலைப் புலிகளால் மட்டுமன்றி, ஊடக விமர்சகர்கள் மத்தியிலும் ஒரு குற்றச்சாட்டு இருந்தது வந்தது. படைத்தரப்புக்கு பாரிய அழிவுகள் ஏற்பட்ட போதெல்லாம், செய்தித் தணிக்கை மற்றும் பிற வழிகளில் அரசபடைகளின் இழப்புகள் பற்றிய தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படாமல் மறைக்கப்பட்டன. சாதாரணமான சண்டைகளில் ஏற்படும் இழப்புகள் கூட இவ்வாறு மறைக்கப்பட்டதான குற்றச்சாட்டுகள் இருந்தன.

இது படையினர் மற்றும் தெற்கிலுள்ள அவர்களின் உளவியல் பலம் சிதைந்து போகாமல் இருப்பதற்கும், புலிகளைப் பலவீனப்படுத்துவதற்குமான ஒரு உளவியல் உத்தியாகவும் கையாளப்பட்டிருக்கலாம். ஏனென்றால் போர் ஒன்றில் 100 விதம் வெளிப்படைத்தன்மை ஒருபோதும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இழப்புகள் பற்றிய உண்மைகளை மறைப்பது அல்லது தாமதமாக வெளியிடுவது வழக்கமான ஒரு உத்தி தான்.

விடுதலைப் புலிகளும் கூட இழப்புகளின் விபரங்களை மறைத்தான குற்றச்சாட்டு அவர்கள் மீது இல்லாவிட்டாலும், அதைத் தாமதமாக வெளியிடும் உத்தியைப் பலசமயங்களில் கையாண்டுள்ளனர். போர் ஒன்றில் உயிரிழப்புகள், காயங்கள் பற்றிய உணர்வுபூர்வமான விடயங்களில் ஒளிவு மறைவுகள் வேணப்படுவது என்பது வழக்கமே. அது இலங்கையில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் நீடித்த போரிலும், தாராளமாகவே கடைப்பிடிக்கப்பட்டது.

SHARE