அரசியல் கட்சிகளாயினும் சரி, ஏனைய பொது நிறுவனங்களாயினும் சரி கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த காலங்களில் அரசியல் கட்சிகள் பல பிளவுகளைக் கண்டுள்ளன.
இதன் விளைவாக பல புதிய அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றுள்ளன. இதற்கு முஸ்லிம் அரசியலும் விதிவிலக்கல்ல.
இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது. அதன் ஸ்தாபகர் மர்ஹூம் அஷ்ரப் இக் கட்சியை தோற்றுவித்து சுமார் ஒன்றரை தசாப்த காலம் பல சவால்களுக்கு மத்தியில் அதனை வழிநடத்திய போதிலும் அவரது மறைவுக்குப் பின் அக் கட்சி பல பிளவுகளைச் சந்தித்தது.
தேசிய காங்கிரஸ் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்றும் தேசிய ஐக்கிய முன்னணி என்றும் பலர் பிரிந்து நின்று முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த அரசியல் பலத்தை சிதறடித்தனர். இதற்கு பிரதான காரணம் முஸ்லிம் காங்கிரசின் தலைமைப் பதவி தொடர்பில் எழுந்த போட்டிகளேயாகும்.
பின்னர் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் மத்தியில் நிலவிய பதவி ஆசைகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பெரும்பான்மை கட்சிகள் இவர்களை தம்பக்கம் ஈர்த்தன. இதன் விளைவு, உரிமைக் கோஷத்துடன் முன்னெடுக்கப்பட்ட முஸ்லிம் அரசியல் பின்னர் சலுகை அல்லது சரணாகதி அரசியலாக மாற்றம் பெற்றது.
அதன் விளைவையே இன்று முஸ்லிம் சமூகம் அனுபவித்து வருகிறது.
மேற்குறிப்பிட்ட உட்கட்சி பிளவுகளின் மற்றொரு அத்தியாயம்தான் தற்போது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருக்கும் செயலாளருக்குமிடையிலான முறுகல் நிலையாகும்.
கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் தனக்கு தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்டிருந்த தேசியப் பட்டியல் எம்.பி. பதவியை தராது ஏமாற்றினார் என்ற காரணத்தினால் அ.இ.ம.காங்கிரஸ் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் கட்சித் தலைமையுடன் முரண்பட்டார். இதனையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தலைவர் ரிஷாட் பதியுதீன் அறிவித்தார்.
எனினும் தன்னை யாராலும் நீக்க முடியாது என்றும் தானே சட்ட ரீதியான செயலாளர் என்றும் ஹமீட் தொடர்ச்சியாக கூறி வருகிறார்.
இதனைப் பொருட்படுத்தாத கட்சித் தலைமை நேற்று முன்தினம் குருநாகலில் பேராளர் மாநாட்டைக் கூட்டி கட்சியின் யாப்பை மாற்றியமைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன் என ஹமீட் பதிலுக்கு காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
முஸ்லிம் அரசியல் வரலாற்றில் இது ஒன்றும் புதிய விடயமல்ல. முஸ்லிம் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமையை வலியுறுத்தியும் இக் கட்சிகளுக்குள்ளே நிலவும் உட்பூசல்களை களைய வேண்டியதன் அவசியம் பற்றியும் எழுதி, பேசி புளித்துப் போய்விட்டது. இதன் பின்னரும் சமூக நலனுக்காக ஒற்றுமைப்படுவார்கள் என்று நம்புவதும் முட்டாள்தனமாகும்.
எப்போது முஸ்லிம் அரசியலை பதவி ஆசை என்ற புற்று நோய் தொற்றியதோ அன்றிலிருந்தே அதன் அழிவும் ஆரம்பமாகிவிட்டது. இப்போது முஸ்லிம் அரசியல் அழிவின் விளிம்பில் வந்து நிற்கிறது. மருந்து செய்ய முடியாத இறுதிக் கட்ட புற்று நோயாக அது மாறிவிட்டது.
முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்த தேசிய காங்கிரஸ் இப்போது இருக்கிறதா இல்லையா? அதன் தலைவர் எங்கே? என்பது யாருக்கும் தெரியாது. அஷ்ரப் ஆசையோடு உருவாக்கிய நுஆவும் கைமாறிவிட்டது. தாய்க் கட்சியான முஸ்லிம் காங்கிரசின் செயலாளரும் ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில் அக் கட்சியின் தலைமை சர்வாதிகாரமாக நடந்து கொள்வதாக கட்சிப் போராளிகளே விமர்சிக்குமளவு நிலைமை மோசமடைந்துள்ளது.
ஆக, மொத்தத்தில் முஸ்லிம் அரசியலை இறைவன் நாடினாலேயன்றி வேறு எவராலும் காப்பாற்ற முடியாது என்கின்ற கையறு நிலைக்கே அது வந்து நிற்கிறது.