மூதூர் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள சம்பூர் பகுதியில் இந்திய அரசாங்கத்தின் பங்களிப்புடன் அனல் மின்சார நிலையம் ஒன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது. மக்கள் வாழிடங்களுக்கு அண்மையாக அமையவுள்ள இத்திட்டத்தை நிறுத்துமாறு பொதுமக்களும் பொதுநல அமைப்புக்களும் ஆரம்பம் முதல் கோரிக்கை விடுத்துவந்த போதும் மக்களின் விருப்புக்கு எதிராக அனல் மின்சார நிலையத்தை நிறுவுவதில் அரசாங்கம் முயற்சி எடுத்து வருகின்றது.
இதுசம்பந்தமாக மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த சிலரிடம் கருத்துக் கேட்டபோது அவர்கள் கூறியவற்றை இங்கு தொகுத்து தருகிறோம்.
எம்.எஸ்.அமானுல்லா
(ஓய்வு பெற்ற அதிபர்)
இன்றைய நவீன உலகில் மின்சாரம் இல்லாமல் எதுவுமே இல்லையென்ற நிலை உருவாகிவிட்டது. மக்கள் பெருக்கத்திற்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஏற்ப நாளுக்கு நாள் அதன் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
ஆகவே, மின்சார உற்பத்தியானது தேவைக்கேற்ப அதிகரிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஆனால், மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வழிமுறையானது மனிதனுக்கும் இயற்கை வளத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இடம்பெறுமாக இருந்தால் அதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
இந்தவகையில் இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு அனல்மின்சார உற்பத்தி பொருத்தமானதல்ல. அனல் மின்சார உற்பத்தியின்போது நீர்,நிலம்,வளி அனைத்தும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும்.
கடல் வாழ் உயிரினங்களை அழித்துவிடுவதில் அல்லது இடம்பெயர்த்துவதிலும் அதேபோல் தரையில் தாவரங்களினதும் விலங்குகளினதும் இயல்பான நிலவுகையில் தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் அனல் மின்சார நிலையமானது செல்வாக்குச் செலுத்தும்.
எனவே, சம்பூர் மக்கள் வாழும் பகுதியில் அனல் மின்சார நிலையத்தை நிறுவும் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிடுவதோடு இப்பிரதேசத்தில் இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடிய காற்று , கடலலை அல்லது சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வது சம்பந்தமாக கவனம் செலுத்துவது அவசியமாகும்.
ஏ.டபிள்யூ.புஹாரி
(சமூக செயற்பாட்டாளர்)
2006ஆம் ஆண்டில் யுத்தம் நிலவியபோது சம்பூர் பகுதியிலிருந்து மக்கள் வெளியேறியிருந்த நிலையில் அப்போது எவருமில்லாத பகுதியில் அமைப்பதற்கு வகுக்கப்பட்ட அனல் மின்சார நிலையம் என்னும் இக்குறித்த திட்டமானது அங்கு மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டதன் மூலம் இயற்கையாகவே செயலிழந்து விட்டது.
எனவே, இது அரசாங்கத்தினால் வகுக்கப்பட்ட திட்டம் என்பதற்காக காலாவதியான இத்திட்டத்தை மக்கள் குடியிருப்புக்களுக்கு அண்மையாக செயற்படுத்துவதை எவராலும் ஏற்றுக் கொள்ளமுடியாது.
அனல் மின்சார உற்பத்தியின் போது சூழலுக்கு ஏற்படும் நேரடித்தாக்கம் சுமார் 15 கிலோ மீட்டர் வரை நீண்டு செல்லும் நிலையில் மக்களின் குடியிருப்புக்களுக்கு மிக அண்மையாக அனல் மின்சார நிலையத்தை அமைப்பதென்பது ஒரு உள்நோக்கம் கொண்டதாகவே தெரிகிறது.
விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலானது திருகோணமலை மாவட்ட மக்களது பிரதான தொழிலாக இருந்து வரும் நிலையில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டால் மக்கள் பாதிக்கப்படுவதென்பது வெளிப்படையான விடயமேயாகும்.
இத்திட்டம்செயற்படுத்தப்படும் போது வெளியாகும் வாயுக்களும் தூசுகளும் வெப்பமும் மக்களை நேரடியாக தாக்குவதனால் பல்வேறு நோய்களுக்கு அவர்கள் ஆளாகும் நிலையும் உருவாகும்.
உலகளாவிய ரீதியில் எதிர்ப்புக்குள்ளாகி விலக்கிக்கொள்ளப்பட்டு வரும் இத்திட்டத்தை ஏதோ புதிய திட்டம்போல் இங்கு செயற்படுத்துவதில் முனைந்து நிற்கும் சக்திகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு காலம் தாழ்த்தாது அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
எஸ்.எம்.தஸ்லீம்
(வைத்தியசாலை அபிவிருத்திக்குழு செயலாளர்)
உலகில் அனல்மின்சார நிலையங்களை நிறுவியுள்ள நாடுகள் அதனால் ஏற்படும் கடும் பாதிப்புக்களுக்கு முகம்கொடுக்க முடியாது திண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் எமது நாட்டில் அதனை புதிதாக நிறுவுவதற்கு எடுக்கப்படும் எத்தகைய முயற்சியையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
சுற்றுச் சூழல் பாதுகாப்பில் இன்றைய அரசு அதிகூடிய கவனத்தை எடுத்துவரும் நிலையில் சூழலுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் இத்திட்டத்தை தொடர்வதில் விடாப்பிடியாக செயற்படுவது ஏன் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
நச்சுத்தன்மையற்ற உணவு உற்பத்தியில் கவனம்செலுத்தும் அதேவேளையில் உணவு உற்பத்தியில் பெரும் பதிப்பை ஏற்படுத்தும் அனல்மின்சாரத்திட்டத்தை மரக்கறி மற்றும் நெற் செய்கைக்கு பெயர்போன சம்பூரில் நிறுவுவதென்பது பொருத்தமற்ற விடயமேயாகும்.
சட்டத்தரணி ஜே.எம். லாஹிர்
(மாகாண சபை உறுப்பினர்)
அனல் மின்சாரத் திட்டமானது சர்வதேச ரீதியில் தோல்வியைத் தழுவி வரும் திட்டமாக அமைந்து வருகின்றது. இந்தியாவும் சீனாவும் கூட இன்னும் சில ஆண்டுகளில் அனல்மின்சாரத் திட்டத்தை தத்தமது நாடுகளில் கைவிடுவதற்கு முடிவெடுத்துள்ளன.
ஆனால்,இவ்விரண்டு நாடுகளும் நமது இச்சிறிய நாட்டிற்குள் அனல் மின்சார நிலையத்தை நிறுவுவதில் ஒத்துழைக்கின்றன. எனவே, இந்நாடுகளின் நோக்கம் என்னவாக இருக்குமென்று ஊகிக்க முடிகின்றது.
எவரது நோக்கம் எதுவாக இருந்த போதும் மக்களுக்கும் சூழலுக்கும் பாதகமான எந்தவொரு திட்டத்தையும் ஆதரிக்க முடியாது. அதற்கு எதிராக எமது செயற்பாடு தொடர்ந்து கொண்டே இருக்கும்.
சம்பூரில் அமையவுள்ள அனல்மின்சார நிலையத்தை ஆரம்பம் முதல் எதிர்த்து வரும் நான் இத்திட்டத்திற்கு எதிராக மூதூர் பீஸ் ஹோம் மற்றும் கிறீன் ரிங்கோ ஆகிய அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த முதலாவது ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டிருந்தேன். இத்திட்டம் குறித்த முறைப்பாடுகளையும் சம்பந்தப்பட்டவர்களூடாகச் செய்துள்ளேன்.
சம்பூர் அனல் மின்சாரத்திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிடுவதற்கு முன்வரவேண்டும். இல்லையேல் இத்திட்டம் வாபஸ் பெறப்படும் வரை மக்களோடு இணைந்து களம் இறங்குவதற்கு தயாராகவே உள்ளேன்.
எஸ். நஸீர்
(பஹ்ரியா மீன் பிடிச் சங்கத்தலைவர்)
மூதூர் கொட்டியாரக்குடாக் கடலிலும் அயல் பகுதியிலுமே மூதூர், கிண்ணியா மற்றும் திருமலை பிரதேச மீனவர்கள் நீண்ட காலமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பூரில் அனல் மின்சார நிலையத்தை அமைக்கின்ற போது குடாக் கடலில் இருந்து பெருமளவான நீரைப் பெற்றுக் கொள்வதன் மூலமும் கழிவு நீரை மீண்டும் கடலில் சேர்ப்பதன் மூலமும் எமது தொழில் சீரழியும் நிலைமையே ஏற்படும்.
எனவே, நாம் பரம்பரை பரம்பரையாக தொழில் செய்து வரும் கொட்டியாரக்குடாக் கடலில் இருந்து அனல் மின்சார நிலையத்திற்கான நீரைப் பெற்றுக் கொள்ளும் கதை உடனடியாக நிறுத்தப்படவேண்டும். அதேபோல, கழிவு நீரை இந்தக் கடலில் சேர்க்கும் திட்டத்தையும் அனுமதிக்க முடியாது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயத்தில் கூடிய அக்கறை எடுத்து அனல் மின்சாரத்திட்டத்தை நிறுத்துவதற்கு முன்வருதல் வேண்டும்.
சட்டத்தரணி எம்.எல்.பைஸர்
( சமூக ஆர்வலர்)
சம்பூரில் அனல் மின்நிலையத்தை அமைப்பதானது உண்மையாக நாட்டின் நலனை அடிப்படையாக கொண்டதா அல்லது அயல் நாடுகளின் அரசியல் நோக்கங்களை மையப்படுத்தியதா என்ற சந்தேகம் எழுகின்றது.
சம்பூர் அனல் மின்நிலையம் மற்றும் அதனுடன் கூடிய தொழிற்சாலைகள் தொடர்பான சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கை முறையாக தயாரிக்கப்பட்டதா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. அனல் மின்சார நிலையத்திற்கென மேற்கொள்ளப்பட்ட காணிச்சுவீகரிப்பானது சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கிச் செல்லவில்லை என்பதே பெரும்பாலானவர்களின் அபிப்பிராயமாக உள்ளது.
நிலைபேறான அபிவிருத்திக்கு சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கை சரியானதாக அமையப்பெற வேண்டியது முக்கிய ஒரு அம்சமாகும்.சுற்றாடல் அறிக்கை ஒன்று பெறப்படும்போது பூகோள ரீதியான வரலாற்று அறிக்கை, பிராந்தியத்தில் இருக்கும் மக்களின் கருத்துக்கள் மற்றும் விஞ்ஞான ரீதியான அறிக்கைகள் என்பன உள்ளடங்கியவாறே சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும்.
இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்ட ஏற்பாடுகளின்படி கருத்திட்ட பிரேரணையாளர்கள் உள்ளூர் பொது மக்களுடன் முறைசாரா கலந்துரையாடல் அல்லது ஆலோசனைகளைப் பெறுவது வலியுறுத்தப்பட்டுள்ளது.அத்தோடு கருத்திட்டம் பற்றிய சரியான தகவல்களை உள்ளூர் மக்கள் பெறுகின்றனரா என்பதை கருத்திட்ட பிரேரணையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
ஆனால், சம்பூர் அனல் மின்நிலையத்தின் சுற்றாடல் தாக்க மதிப்பீடு குறித்த உள்ளூர் மக்கள் யுத்தத்தால் இடம்பெயரந்து பல்வேறு மாவட்டங்களில் அகதிகளாக இருந்த நிலையிலும் மக்களின் கருத்து வெளியிடும் மனநிலை சூன்யமாக இருந்த காலப்பகுதியிலும் தயாரிக்கப்பட்ட அறிக்கை என்பதை தெளிவாக சுட்டிக்காட்ட முடியும்.
எனவே, குறித்த அனல் மின்னிலையம் சம்பூர் பகுதியில் அமைவதை நிறுத்துவதற்கு ஒருமித்த கருத்துடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.