தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தலைமையில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் நேற்று முன்தினம் மாலை ஒன்றுகூடி கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தனர்.
கொழும்பில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப. உதயராசா, ஈரோஸ் கட்சியின் தலைவர் பிரபாகரன் உட்பட வேறு சிலரும் பங்குபற்றியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக புதியதொரு கூட்டணியினை அமைக்கும் நோக்கிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா அணியைச் சேர்ந்தவருமான வரதராஜப் பெருமாள் பங்கேற்பதாக இருந்த போதிலும் இறுதி நேரத்தில் இவர் சமூகமளிக்கவில்லையென தெரிகின்றது.
எதிர்வரும் 8ம் திகதி மீண்டும் கூடி புதிய கூட்டமைப்பு குறித்து கலந்துரையாடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் முன்னாள் முதலமைச்சர் வரதாரஜப் பெருமாள் மற்றும் தமிழர் மகா சபையின் தலைவர் விக்னேஸ்வரன் உட்பட வேறு சில கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்பத்றகு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு அண்மையில் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த அமைப்பு அரசியல் தீர்வு யோசனை தொடர்பிலும் தமது முன்மொழிவை முன்வைத்திருக்கின்றது.
இந்த நிலையிலேயே புதிய கூட்டணி ஒன்றினை ஆரம்பிப்பது தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தககதாகும்