முல்லைத்தீவு கச்சேரியில் 02.04.2016 சனிக்கிழமை கடற்றொழில் நீரியல் வளங்கல் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மகிந்த அமரவீர அவர்கள் விஜயம் செய்து முல்லை மாவட்ட கடற்றொழிலாளர்களின் பிரச்சனைகளை முற்று முழுதாக ஆராயந்தார்.
மேற்படி நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முல்லை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான வைத்திய கலாநிதி சி.சிவமோகன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.சார்ள்ஸ், திரு.மஸ்தான், திருமதி.சாந்தி சிறிஸ்கந்தராசா மற்றும் வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர் திரு. அன்ரனி ஜெகநாதன் ஆகியோர் பங்குபற்றினர்.
அமைச்சருக்கு பிரச்சனைகளை தெரியப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் சட்ட விரோத கடல் அட்டைகளை பிடிப்பது குறித்து தெளிவுபடுத்தினார். மேலும் அவர் தெரிவிக்கும் போது வருடா வருடம் கடல் அட்டைகளை தென் பகுதியில் இருந்து வரும் தொழிலாளர்கள் தொடர்ச்சியான சட்ட விரோத நடைமுறைகளான இரவில் ஒளியுட்டி கடல் அட்டைகளை பிடித்தல், ஒதுக்கப்பட்ட கடல் மைல் தூரத்திற்குள் கடல் அட்டைகளைப் பிடித்தல், கடல் வளமான சங்குகள் போன்றவற்றை அள்ளுதல், அளவு வேறுபாடுகள் இன்றி கடல் அட்டைகளைப் பிடித்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குறிப்பிட்டார்.
மேலும் இவர்களது சட்ட விரோத நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கு முல்லை மாவட்ட கடற்றொழில் அமைச்சு அதிகாரிகள் இயலாத நிலையில் இருப்பதாக தெரிவித்தார். எனவே கடற்றொழில் அமைச்சு ஏனைய மாவட்டங்களில் கடல் அட்டைகளை பிடிப்பது தடை செய்யப்பட்டிருப்பது போன்று, முல்லை மாவட்டத்திலும் கடல் அட்டைகளைப் பிடிக்க அனுமதி வழங்கக்கூடாது எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், யுத்த காலத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் கரைவலைப்பாடுகளை சிங்கள முதலாளிகள் சட்டத்திற்கு விரோதமாக கைப்பற்றி வைத்திருக்கின்றார்கள். குறிப்;பாக ரூக்மன் நிவேரா என்பவர் கொக்கிளாய் பிரதேசத்தில் தமிழர் ஒருவரின் கரைவலைப்பாடுகளை சட்டத்திற்கு முரனாக கைப்பற்றி வைத்துள்ளார். எனவே அவருக்கு வழங்கப்பட்ட அனுமதி நிறுத்தப்பட்டு, அப்பிரதேச சட்ட உரித்துடைய தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் கூறினார். மேற்படி உருத்து முல்லை மாவட்ட நிர்வாகத்திற்குரியது, அதனை திருகோணமலை மாவட்ட அரச அதிபர் சட்டத்ற்கு விரோதமாக வழங்கியுள்ளார் என்பதனை சுட்டிக்காட்டினார்.