இராணுவம் அடாவடித்தனமாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காணிகளை மக்களிடம் இருந்து பறித்தெடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அந்த அடிப்படையில் அரசின் காணி சுவீகரிப்பு நடவடிக்கை மூலம் செவ்வாய், புதன், வியாழன் கிழமைகளில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், விஸ்வமடு, நாயாறு பிரதேசங்களில் காணிப்பறிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
மேற்படி விடயம் சம்பந்தமாக பொதுமக்கள் ஒன்றுகூடி சி.சிவமோகன் எம்.பி அவர்களின் புதுக்குடியிருப்பு காரியாலயத்தில் நேற்று கூடி முறையிட்டு ஆராய்ந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் அரசிற்கும், இராணுவத்திற்கும் எதிராக போராடுவதை தவிர வேறு வழியில்லை என பொதுமக்கள் தீர்மானித்தனர். அந்த அடிப்படையில் நாளை செவ்வாய்க்கிழமை முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாகவும், எமது உரிமைகளை கோரி அகிம்சை வழியில் போராடுவதாகவும் முடிவெடுத்தனர்.
மேற்படி கூட்டத்தின் பின் கருத்து தெரிவித்த எம்.பி. சிவமோகன், இது இராணுவத்தின் ஒரு அநியாயமான செயல், இதற்கு உடந்தையாக அரசு செயல்படுகிறது. இது இனநல்லிணக்கம் பற்றி பேசும் அரசின் செயலை கேலிக்கூத்தாக்கும். எனவே அரச, இராணுவ அதிகாரிகளின் செயல்களுக்கு செவிசாய்க்காது, மக்களின் மன எண்ணங்களுக்கு ஆதரவு கொடுக்க அரசு முன்வரவேண்டும் என்றார்.