விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி நகுலன் இனந்தெரியாத நபர்களினால் இன்று (செவ்வாய்க்கிழமை) கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்ட அவர் யாழ்ப்பாணம் நீர்வேலி, கந்தசுவாமி கோயில் தெற்குப் பகுதியில் வசித்துவந்தார். முன்னாள் சாள்ஸ் அன்ரனிப் படைப்பிரிவின் சிறப்புத் தளபதியான நகுலன் என அழைக்கப்படும் கணபதி பிள்ளை சிவமூர்த்தி என்பவரே இன்று இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டார்.
நேற்று மாலை இவரது வீட்டுக்குச் சென்ற சிலர் இவரை விசாரித்துவிட்டு சென்றுவிட்டு மீண்டும் இன்று காலை வீட்டுக்குச் சென்று விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
தந்தையுடன், யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நகுலன், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பிவைப்பதாக சிவில் உடையில் சென்ற நபர்கள் அவரின் தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.
நகுலன் அவர்கள் இரண்டுவருடங்களுக்கு முன்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மீண்டும் குடும்ப வாழ்வில் இணைந்து அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளதாகத் தெரியவருகின்றது.