காலை 9.00 மணிக்கு (27.04.2016) இராணுவத்தால் சுவீகரிக்கப்படவுள்ள காணிகளுக்கு எதிராகவும், அவைகளை விடுவிக்க கோரியும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் வைத்தியசாலை அமைந்திருந்த பொதுமக்களுக்கான பதினேழு ஏக்கர் காணி, சுதந்திரபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள காணிகள், நாயாறு பிரதேசத்தில் உள்ள காணிகள் என பல காணிகளை இராணுவம் அடாவடித்தனமாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு எதிராக மக்கள் உண்ணாவிரத போராட்டத்திலும், பெருந்திரலான மக்கள் தமது உரிமைகளை கோரி அகிம்சை வழியில் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டுவருகின்றனர்.
இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சிவமோகன் மற்றும் வட மாகாணசபை பிரதி அவைத்தலைவர் திரு.அன்ரனி ஜெகநாதன் என பல பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.