பாலியல் தொழிலை அங்கீகரிக்கலாமா?-ஒரு பார்வை

822

 

 

விபச்சாரம், அபச்சாரம், விகிதாச்சாரம், கலாச்சாரம், சம்சாரம், சமாச்சாரம். ….  என்ன சாரமோ, என்னென்ன சாரமோ, ஒரு சாரமும் விளங்கவில்லை.

விபச்சாரம்னா என்ன? எங்கே செய்தால் அது விபச்சாரம்? யார் யாரெல்லாம் செய்தால் அது விபச்சாரம் என்கிற வட்டத்துக்குள் வரும்? எந்தெந்த சூழ்நிலைகளில் விபச்சாரம் விபச்சாரமாகாது? இதெல்லாம் ஒண்ணுமே விளங்காத ஒரு புதிராகவே இன்னும் இருந்து வருகிறது.

மும்பையிலும், கொல்கத்தாவிலும் விபச்சாரம் செய்தால் அதை சட்டம் எதுவும் செய்யாதாம். ஆனால் சென்னையில் மட்டும் விபச்சாரம் செய்தால் அது பாவமாம். சட்டப்படி குற்றமாம். என்ன சட்டமோ என்ன வெங்காயமோ, ஒரு மண்ணும் புரிய மாட்டேங்குது.

விபச்சாரம்னா என்னதான் அர்த்தம்? மனைவி அல்லாத வேறு ஒரு பெண்ணுடன், உடல் ரீதியான தொடர்பை, சுகத்தை, பணம்கொடுத்துப் பெறுவதுதான் விபச்சாரம் என்றால் ஓரளவு சரியாக இருக்குமா? அப்படியானால்,சினிமாவில் நடிக்கும் அத்தனை நடிகைகளும் தேவையான அளவு பணம் பெற்றுக்கொண்டு, விபச்சாரத்திற்குண்டான அத்தனை வேலைகளையும் செய்கிறார்களே, அது எந்த வகையில் சேர்த்தி? கதாநாயகனையும், சிலசமயம் வில்லனையும் கட்டிப்பிடிக்கிறார்கள், உரசுகிறார்கள், முத்தமிடுகிறார்கள், மோகிக்கிறார்கள், பம்பரம் விடுகிறார்கள், படுக்கை விரிக்கிறார்கள், ஆம்லேட் போடுகிறார்கள், அவுத்துப்போட்டு அணுகுண்டும் வெடிக்கிறார்கள். இப்படி அத்தனையும் செய்கிறார்களே…. அதெல்லாம் என்ன சாரம்??

அரசியல்வாதிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். தில்லியிலிருந்து திவாரிகள் வரை அத்தனையும் அப்படித்தான். இரண்டு மூன்று மனைவிகள், மூன்று நான்கு குடும்பங்கள், நான்கு ஐந்து தொடுப்புகள்….. எல்லாமே சர்வ மயம். அவர்களுக்கெல்லாம் இந்த “சாரம்” பொருந்தாதோ?

“திருமணமாகாத ஒரு ஆணும் பெண்ணும் தனியறையில் தகாத முறையில் தங்கி இருந்தால் அது விபச்சாரமாகுமா?”–“விபச்சாரத்தில் பெண்ணுக்கு மட்டும்தான் தண்டனை, ஆணுக்குக் கிடையாதா?”–இதுமாதிரியான கேள்விகளுக்கு இதுவரை தெளிவான பதில் கிடைத்தபாடில்லை.

முதலில் ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் விபச்சாரம் என்பது எந்தச் சட்டத்திலும் குற்றம் என்று சொல்லப்படவில்லை. ஒரு ஆணும் பெண்ணும் தாங்களாக விருப்பப்பட்டு, இசைந்து உறவு கொள்ளும் பட்சத்தில் – அது எந்தவிதத்திலும் சட்டப்படி குற்றமாகாது. ஆனால்…இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம், அந்த இருவரும் கட்டாயம் மேஜராக இருக்கவேண்டும். ஒருவேளை-பெண் பதினாறு வயதுக்குக் குறைவானவளாக இருந்து, அந்தப்பெண்ணின் முழுசம்மதத்துடனே நீங்கள் அவளுடன் உறவு கொண்டாலும்கூட, சட்டத்தின் பார்வையில் அது கற்பழிப்புக் குற்றமாகிவிடும் என்பதயும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அப்படியானால், இன்னும் ஒரு கேள்வி எழுகிறது. பலருடைய மனதிலும் இருந்து வாட்டிவதைக்கிற கேள்வி இது. ஒரு லாட்ஜில் ஆணும் பெண்ணும் தனியாக ஒரே அறையில் தங்கி இருக்கிறார்கள். திடீரென போலிஸ் வந்து சோதனையிடுகிறது. இந்நிலையில் அவர்கள் கைது செய்யப்படுவார்களா? இதற்கான தெளிவான பதில்…. அவர்கள் இருவரும் மேஜர் என்கிற பட்சத்திலும், அவர்களால் வெளி உலகிற்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாத பட்சத்திலும் அது குற்றமுமல்ல, அவர்கள் குற்றவாளிகளும் அல்ல, போலிஸ் கைது செய்யவும் முடியாது.

அதேபோல, எனக்குச் சொந்தமான வீட்டில், எனது பாலியில் தேவைக்காக – பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண்ணை அவளுடைய சம்மதத்துடன் அழைத்து வந்து நான் தங்கவைத்திருந்தாலும் அது சட்டப்படி குற்றமாகாது.

ஆனால்… நடைமுறையில் அப்படியா நடக்கிறது? இந்தியாவில் எந்த சட்டம்தான் சட்டவிதிகளின்படி நடக்கிறது, இந்த சட்டம் நடப்பதற்கு?

அப்படியே கைது செய்தாலும், கேஸ் போடும்போது உண்மையைப் போடமாட்டார்கள். அது செல்லாது, போடவும் முடியாது. இந்த மாதிரியான வழக்குகளை யாராவது கவனித்திருந்தால் தெரியும். அவர்கள் தினமும் எழுதிக் குவிக்கும் F.I.R. ஐப் பாருங்கள். எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான வாசகம்தான் இருக்கும்,

“நான் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தேன். அப்போது பார்த்தால் அடையாளம் காட்டக் கூடிய பெண்ஒருத்தி என் அருகே வந்து, ‘வருகிறாயா ஜாலியாக இருக்கலாம்’ என்று அழைத்தாள்”—“நான் ரோட்டில் நடந்து வரும்போது கண்ஜடையாலும், கைஅசைப்பினாலும் காம இச்சையைத் தூண்டும வகையில் என்னை தகாத உறவுக்கு அழைத்தாள்”- இப்படித்தான் எல்லாக் கதைவசனங்களும் ரெடிமேடாகவே இருக்கும். ‘பெண் ஓரக்கண் சாடை காட்டி அழைத்தாலே தவறு’என்று சட்டம் சொல்கிறது..(ஆனால், அந்த ஓரக்கண் அழைப்பை உதாசீனப்படுத்தாது உடன்போகும் ஆணுக்கு???)

இந்தியாவில் 1956ம் ஆண்டுதான் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திச் சுரண்டுவதைத் தடுக்கும் எண்ணத்துடன் “The Suppression of Immoral Traffic Act’1956” என்கிற சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி விபச்சாரம் என்பது குற்றமல்ல. ஆனால் விபச்சார விடுதி நடத்துவது, அதற்கு உதவி செய்வது போன்றவைதான் குற்றம்.

எது விபச்சார விடுதி என்பதை எப்படி வரையறுப்பது?                                                                                                                             எந்த ஒரு வீடோ, இடமோ, பகுதியோ விபச்சாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டு – அந்த விபச்சாரத்தின் பலன் வேறு ஒரு நபருக்கோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட விபச்சாரிகளுக்கோ கிடைக்குமானால், அது விபச்சார விடுதியாகிறது. (ஒரு பெண் வேறு யாருடைய துணையுமின்றி தனியாகத் தங்கியிருந்து விபச்சாரத்தில் ஈடுபட்டால் அது விபச்சார விடுதியாகாது. அப்படி செய்வதில் குற்றமுமில்லை) ஆனால் இரு பெண்கள் தங்கியிருந்து தங்களுடைய வருமானத்தைப் பகிர்ந்து கொண்டால் அது குற்றமாகிறது. மேலும் ஒரு விபச்சாரியை அண்டி அவர் விபச்சாரம் மூலம் சம்பாதிக்கும் பணத்தில் வாழும் நபர், பதினெட்டு வயது நிரம்பியவர் என்றால் அதுவே ஒரு குற்றமாகிறது. இதில் மகன், மகள் கூட அடக்கம்.(குழப்புகிறதா?)

இதிலிருந்தே இந்தச் சட்டத்தின் நோக்கம் விபச்சாரத்தைத் தடுப்பதல்ல, மறாக விபச்சாரம் செய்பவரைத் தவிர விபச்சாரத்தின் மூலம் வேறு நபர்கள் பலனடைவதைத் தடுப்பதே என்பதை அறியலாம்.எனவே இங்கு பணமளிக்கும் நபர் எந்தவித குற்றமும் செய்யவில்லை. எனவேதான் ஆணுக்குத் தண்டனையில்லை. ஆனால் அவரும் ஒரு சந்தர்ப்பத்தில் குற்றவாளியாக முடியும். அதாவது, விபச்சாரம் நடைபெற்ற இடம் கோவில், கல்விக்கூடம், விடுதி, மருத்துவச்சாலை போன்றவற்றிற்கு 200 மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கையில் இரண்டு நபர்களும் குற்றவாளியாகின்றனர்.

ஒரு ஆணும் பெண்ணும் சுயவிருப்பத்துடன் உறவுகொள்வது விபச்சாரம் அல்ல என்கிறது சட்டம். விருப்பத்துடன் உறவுகொள்வது எவ்வாறு விபச்சாரமாக முடியும்? ஆனால், வழக்கம்போல நடைமுறையில் அது வேறுவிதமாகத்தான் கையாளப்படுகிறது. புரிபடுதலில் ஏற்பட்ட கோளாறா? அல்லது போலித்தனமா? புரியவில்லை.

பாலியல் தொழிலை அங்கீகரிக்கலாமா,கூடாதா என்று சர்ச்சை நடக்கிறது.சிறுமிகள் கடத்தப்பட்டு இந்ததொழிலில் தள்ளப்படுவதை தடுக்ககடுமையான சட்டம் தேவை என்று ஒருசேவை நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.அதை விசாரித்த உச்சநீதி மன்றம்,சட்டங்கள் மூலம் எந்த நாடும் பாலியல்தொழிலை ஒழிக்க முடியாத நிலையில்,சட்டபூர்வமாக அதனை அங்கீகரித்தால்அதிலுள்ள பெண்களுக்கு மரியாதை,பாதுகாப்பு, மருத்துவ பயன்கள்கிடைக்குமே என்று கேட்டனர்.

இந்தியாவில் 30 லட்சம் பெண்கள் பாலியல் தொழில் செய்வதாக அரசு ஆய்வுசொல்கிறது. ஒரு கோடிக்கு மேல் என்று மற்றொரு கணக்கு தெரிவிக்கிறது. பல லட்சம்சிறுமிகளும் இதில் அடங்குவர். சொந்த ஊரில் இருந்து ஏமாற்றி கடத்தி வரப்பட்டவர்கள்.பாலியல் தொழிலின் அஸ்திவாரம் வறுமை. ஆண்டு தோறும் அந்த பெண்களின்எண்ணிக்கை அதிகரிப்பது வறுமையின் வளர்ச்சிக்கு சான்று.

‘விபசார அழகிகள் கைது என்று சில பத்திரிகைகள் ரசனையோடு வெளியிடும் செய்திகள்அடிக்கடி வந்தாலும், நமது நாட்டில் பாலியல் தொழில் சட்ட விரோதமானது அல்லஎன்பது பலருக்கு தெரியாத உண்மை. இந்த செய்திகளை வாசிப்பவர்களுக்கு, ‘ஆசைகாட்டி அழைத்தாராம் என்ற வாசகம் பரிச்சயமானது. அதாவது, பொது இடத்தில்ஒருவரை பாலியல் உறவுக்கு அழைப்பதுதான் சட்டப்படி குற்றம். அதற்கென விடுதிநடத்துவதும், ஆள் பிடிக்க புரோக்கர் (இதற்கும் ஒரு நல்ல சொல்லை வீணாக்கிவிட்டனர்)வைப்பதும் குற்றங்கள். ஆக, ஏதோ ஒரு சட்டத்தை மீறாமல் தொழில் செய்ய முடியாது.இருந்தும் கொல்கத்தாவில் சோனாகச்சி, மும்பையில் காமாத்திபுர, டெல்லியில்ஜி.பி.ரோடு என்று ஊருக்கு ஊர் சில பகுதிகள் பாலியல் தொழிலிடங்களாக சுறுசுறுப்புடன்இயங்குகின்றன. சோனாகச்சி பெண்களுக்கு சமீபத்தில்தான் எல்.ஐ.சி. காப்பீடுவழங்கப்பட்டது. உடலை விற்பது சிறந்த வர்த்தகமல்ல என்றாலும், வேறேதும்இல்லாதவர்களை பழிப்பதில் அர்த்தமில்லை. போலீஸ் பயம், சமூக அவமானம்,தொல்லைகளில் இருந்து அவர்களுக்கு விடுதலை தேவை. அப்படியானால் ஒழிக்கமுடியாத லஞ்சம், திருட்டு, கொலைகளையும் அங்கீகரிக்கலாமா என்று ஒரு கூட்டம்கேட்கிறது. இவர்களுக்கு இந்த நாட்டில் என்றும் பஞ்சமில்லை.

விபசாரத்தைத் தடுக்க முடியவில்லை என்றால் அதை ஏன் சட்டபூர்வமாக்க கூடாது என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பெண் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுப்பது தொடர்பாக பச்பன் பச்சோ ஆந்தோலன் என்ற என்.ஜி.ஓ. அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தது. நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, ஏ.கே.பட்நாயக் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், ‘‘உலகின் பழமையான தொழிலான விபசாரத்தை சட்டத்தால் தடுக்க முடியவில்லை”  என்றார்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
“விபசாரத்தை சட்டப்படி தடுக்க முடியவில்லை என்றால், அதை ஏன் மத்திய அரசு சட்டமாக்க கூடாது. ஏதோ ஒரு வழியில் விபசாரம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. உலகில் எந்த நாட்டிலும் விபசாரத்தை சட்டத்தால் தடுக்க முடியவில்லை. இத்தொழிலில் சிலர் நவீன முறையில் ஈடுபட்டுள்ளனர். அதை கண்டுபிடிக்க முடியாது. அதனால் விபசாரத்தை மத்திய அரசு ஏன் சட்டபூர்வமாக்க கூடாது? விபசாரத்தை சட்டபூர்வமாக அனுமதித்தால், அந்த தொழிலை கண்காணிக்க முடியும். அத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மறுவாழ்வு, மருத்துவ உதவிகள் அளிக்க முடியும் அல்லவா?”  என்று கேள்வி எழுப்பினர்.
SHARE