சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவியும், மகளும், பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் அழைப்புகளை நிராகரித்து வருகின்றனர்.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள், ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு, முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்காக, பசில் ராஜபக்சவின் மனைவி புஸ்பா ராஜபக்சவையும், மகள் தேஜா ராஜபக்சவையும், முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுத்திருந்தது.
சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்திகள் மற்றும் விமானங்களை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இரண்டு தடவைகள் இவர்களுக்கு அழைப்பாணை விடுத்த போதிலும், விசாரணைகளுக்கு முன்னிலையாகவில்லை. இந்த நிலையில், மீண்டும் மே 13ஆம் திகதிக்கு முன்னர் அவர்களை முன்னிலையாகும்படி அழைப்பாணை விடுக்க ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
இவர்கள் முன்னிலையாகாத நிலையில், விசாரணைகளை முடிக்க முடியாமல் ஆணைக்குழு அதிகாரிகள் திணறி வருகின்றனர்.