அஸ்ஸாம் மாநில மருத்துவமனை ஒன்றில் 3 வயது சிறுவனுக்கு சிகிச்சையின் போது அளிக்கப்பட்ட இரத்தத்தால் எய்ட்ஸ் நோய் பரவியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவுகாத்தி அரசு மருத்துவமனையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம், குறித்த குழந்தை உடலில் 40 சதவிகித தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.
அங்கு 5 மாதங்கள் நடைபெற்ற சிகிச்சையை அடுத்து கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய குழந்தை கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி, மீதமுள்ள சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இதன்போது எடுத்த இரத்த பரிசோதனையில், அக்குழந்தைக்கு எச்.ஐ.வி (எய்ட்ஸ்) உள்ளமை தெரியவந்துள்ளது.
தீக்காயங்களுக்காக நடந்த சிகிச்சையின் போது அச்சிறுவனுக்கு பல்வேறு முறை இரத்த பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இதன்போதே அச்சிறுவனுக்கு இரத்தம் மூலம் எச்.ஐ.வி பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவர்கள் இதுபற்றி கூறுகையில், அக்குழந்தை கடந்த ஆண்டு சிகிச்சை முடிந்து சென்ற பின்னர், 6 மாதங்கள் கழித்தே மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
எனவே, அந்த 6 மாத காலத்தில் என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. மேலும், எங்கள் இரத்த வங்கியில், எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட இரத்தம் இருக்க வாய்ப்பில்லை. எனினும், இரத்த வங்கியில் இது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் தாய் கூறுகையில், நாங்கள் மிகவும் பயத்திலும் வருத்தத்திலும் இருக்கிறோம். எங்கள் மகனின் எதிர்காலம் என்னவாகும் என்ற அச்சத்தில் இருக்கிறோம். நாங்கள் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தற்போது இந்த மருத்துவ செலவை எப்படி ஏற்க போகிறோம் என தெரியவில்லை என கூறியுள்ளார்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விடயம் தொடர்பாக விசாரிக்க, 5 பேர் கொண்ட மருத்துவ குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு, அஸாமில் உள்ள தராங் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், இரத்த வங்கியில் இருந்து இரத்தம் பெற்ற 4 பேருக்கு எய்ட்ஸ் நோய் பரவியமை குறிப்பிடத்தக்கது.