பிரித்தானியாவில் இடம்பெறும் “ஊழலுக்கெதிரான சர்வதேச மாநாடு – 2016ல் கலந்து கொள்வதற்காக நேற்று முற்பகல் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, லண்டன் ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை பிரித்தானிய மகாராணியின் விசேட பிரதிநிதியான பிரதி லெப்டினன்ட் புரூஸ் ஹோல்டர் (Bruce Holder), வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவல்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சின் விசேட பிரதிநிதி திருமதி கத்ரின் கொல்வின் (Kathryn Colvin) உள்ளிட்ட பிரிவினர் ஆரவாரமாக வரவேற்றுள்ளனர்.
இன்று பிற்பகல் 2.30க்கு லண்டன் நகரில் அமைந்துள்ள Lancaster Houseல் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனின் தலைமையில் ஊழலுக்கெதிரான சர்வதேச மாநாடு ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் மாநாட்டின் ஆரம்ப தினத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்ற உள்ளமை விசேட அம்சமாகும்.
சர்வதேச அரச தலைவர்களின் பங்கேற்பில் இடம்பெறும் இந்த மாநாட்டில் லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுப்பதற்கு புதிய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக உரையாற்றி உலக தலைவர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.