புதுக்குடியிருப்பு நகரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாரை சாரையாக கலந்து கொண்டு தமிழ் மண்ணின் எழுச்சியை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தினர். இதுவே யுத்த முடிவின் பின் தமிழன் திரண்டெழுந்த நிகழ்வு எனலாம்.
சிவப்பு, மஞ்சல் கொடிகள் வீதி எங்கும் பறக்க மைதானம் நிறைந்த மக்களுடன் சிவப்பு, மஞ்சல் கொடிகள் மீண்டும் ஒரு முறை சங்கமித்தது. முத்தமிழ் விழா பதாகைகள் பழைய வரலாற்றை மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்தி நின்றது.
மேற்படி நிகழ்வில் கலந்து உரையாற்றிய வன்னி எம்.பி.சி.சிவமோகன் தெரிவிக்கையில் ஈழம் என்பதற்கு தமிழில் நீரில் இருந்து எடுக்கும் தங்கம் என்று பொருள். பாலியாற்றில் மணல் கரைகளில் இன்றும் தங்க துகள்கள் அடிபட்டு செல்வதை காணலாம் என்றார். தமிழர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர், உடமைகளை இழந்தனர், தாம் வாழ்ந்த பூர்வீக மண்னை இழந்தனர், தமது சுய பாதுகாப்பை இழந்தனர் ஆனால் தமது கல்வியையும், கலாச்சாரத்தையும் இழக்கவில்லை. இந் நிகழ்வு தமிழனின் கலாச்சாரத்தையும் கலையையும் நிலை நிறுத்தும் ஒரு நிகழ்வு. கலாச்சாரம் என்பது ஒரு இனத்தின் அடையாளம். இன்று எமது தனித்துவத்ததை தமிழன் மீண்டும் ஒரு முறை கலாச்சார நிகழ்வு மூலம் நிறைவேற்றியிருக்கின்றான். முள்ளிவாய்க்காலில் தமிழினத்தின் வரலாறு முடிந்துவிட்டது என கூறியவர்களுக்கு சிவப்பு மஞ்சல் கொடிகள் மீண்டும் புதிய கதைபேசி நிற்கின்றது.
அன்று அடங்காபற்றில் அரசோச்சிய தமிழன். தனது மண்ணில் கலாச்சார எழுச்சி மூலம் மீண்டெழுவான் என்ற எமது உரிமையை காக்கும் செய்தியை கூறி நிற்கிறான் என்றார். போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும். முன் நடந்து செல் வன்னித் தமிழா. காத்திடு உன் கலாச்;சாரத்தை, நிலை நிறுத்திடு உன் தமிழினத்தின் அடையாளத்தை என்றார் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சிவமோகன். மேலும் நடந்த மேடை நிகழ்வுகளில் கோவலன் கூத்து, காத்தவராயன் கூத்து, அரிச்சந்திர மயான காண்டம், பண்டார வன்னியன் ஆகியவை மேடையேறியது.
இந்நிகழ்வில் உரையாற்றிய தென் இந்திய திரைப்பட நடிகர் சங்க தலைவர் நாசர் அவர்கள் இந்த மக்கள் வலி கண்டவர்கள், எனவே அவர்களுக்குத்தான் முடியும் சிறந்த ஈழமண் படைப்புக்களை படைப்பதற்கு, ஈழ வரலாற்றை எழுதக்கூடியவன் ஈழமண்ணில் இருந்துதான் உருவாக வேண்டும் என்றார்.