கிடைக்கும் உதவிகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என வாழ்வுடைமை உதவி பெற்ற பயனாளிகட்கு ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டுக்கான தனது ஒதுக்கீட்டில் தெரிவுசெய்யப்பட்ட பதினைந்து பயனாளிகளுக்கு விவசாய கருவிகளை வழங்கும் நிகழ்வொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மதிப்புறு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருநூறாயிரம் உரூபாயினை விவசாய கருவிகளை வழங்குவதற்கென ஒதுக்கியுள்ளார்.
இதில் பத்து பயனாளிகளுக்கு தெளிகருவிகளும், ஐந்து பயனாளிகளுக்கு நீர் அழுத்த மின்விசைப்பொறியுமாக மொத்தம் பதினைந்து பயனாளிகள் உதவிகளைப் பெற்றுக்கொண்டனர்.
விவசாயக்கருவிகள் வழங்கும் குறித்த நிகழ்வானது கடந்த 2016-07-04 ஆம் நாளன்று முல்லை. மாவட்ட விவசாயப்பணிமனையில் நடைபெற்றது.
மாவட்டத்தின் விவசாய பிரதிப்பணிப்பாளர் தலைமையில் பயனாளிகள், பணியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ரவிகரன் அவர்கள் உரையாற்றும் போது,
வாழ்வுடைமை உதவிகளை கோருபவர்கள் மிகக்கூடுதலாக உள்ளனர். அவர்களுள் தெரிவுசெய்யப்பட்ட நிலையிலேயே நீங்கள் இன்றைய ஊக்குவிப்பு நிகழ்வில் கலந்து கொள்கிறீர்கள். இந்த வகையில் உதவிகளை பெற்றுக்கொள்பவர்கள் கிடைக்கும் இவ்வுதவியை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். ஊக்குவிக்கப்பட்டதால் நாம் வாழ்வில் முன்னேறினோம் என்பதை செயலிலும் காட்டவேண்டும்;. இம்முன்னெடுப்புகளின் வெற்றியென்பது உங்களின் வெற்றியிலேயே தங்கியுள்ளது என்றார்