புகைத்தல் மற்றும் போதைப் பொருட்களிலிருந்து எதிர்கால சந்ததியினரைப்
பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஜனாதிபதி
வலியுறுத்து……
புகைத்தலுக்காக விதிக்கப்பட்டுள்ள வரியினை அதிகரிக்கச் செய்து தனியார் வைத்தியசாலைக்
கட்டணங்கள் மீது அறவிடப்படும் வட் வரியினை முற்றாக நீக்குமாறு ஏற்புடைய பிரிவுகளுக்கு தான்
ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இன்று (23) பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கை
போதைப்பொருள் ஒழிப்புக்கான மகாசபையின் 104ஆவது ஆண்டு பூர்த்தி விழாவில் உரையாற்றிய போதே
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
மனித உயிர்களை அழிக்கும் புகைத்தலினாலும் போதைப்பொருட்களினாலும் எதிர்கால சந்ததியினரைப்
பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஜனாதிபதி அவர்கள் இதன்போது
வலியுறுத்தினார்.
சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் சுற்றிவலைப்புக்களை
மேற்கொள்வதற்கும் பொலிஸ் மற்றும் மதுவரி உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக தரைப்படை,
கடற்படை, விமானப்படைகளிலும் விசேட தகவல் சேவை மற்றும் புலனாய்வுத் துறைகளிலும் புறம்பான
பிரிவுகளை தாபிப்பதற்கு தேசிய பாதுகாப்பு சபையில் தான் ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதி அவர்கள்
மேலும் தெரிவித்தார்.
புகையிலை மற்றும் மதுசாரங்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் மூலம் திறைசேரியைப் பலப்படுத்தல்
தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டு மக்களை
ஆரோக்கியம் மிக்க மக்களாக கட்டியெழுப்பி சுதந்திரமானதொரு நாட்டைக் கட்டியெழுப்புதல் அரசாங்கதின்
நோக்கம் எனக் குறிப்பிட்டார்.
இலங்கை போதைப்பொருள் ஒழிப்புக்கான மகாசபை மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் இதனோடு
தொடர்பாக தொழிற்படும் போதைப்பொருள் தடுப்பு மற்றும் புனர்வாழ்வு அமைப்புக்களுடன் நடாத்தப்பட்ட
கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகளின் போது மேலெழுந்த விடயங்களை அடிப்படையாக கொண்டு
தயாரிக்கப்பட்ட விசேட யோசனைத்திட்டம் இங்கு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
கோட்டே ஶ்ரீ கல்யாணி சாமகிரி மகாசபையின் மகாநாயக்கர் இலங்கை போதைப்பொருள் ஒழிப்பு
சபையின் தலைவர் கலாநிதி சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர்,
பொலிஸ் மாஅதிபர் திரு பூஜித ஜயசுந்தர மற்றும் இலங்கை போதைப்பொருள் ஒழிப்பு சபையின்
உறுப்பினர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
நல்லாட்சி பெயர்ப்பலகையின் பின்னால் நின்றுகொண்டு தவறிழைப்பதற்கு யாருக்கும்
இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி
நல்லாட்சி பெயர்ப்பலகையின் பின்னால் நின்றுகொண்டு தவறிழைப்பதற்கு
அரசியல்வாதிகளுக்கோ அல்லது அரச அதிகாரிகளுக்கோ இடமளிக்கப்படமாட்டாது என
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
எல்லோரும் தமது மனசாட்சிக்கு ஏற்ப செயற்படவில்லையாயின் மக்கள் நல்லாட்சி
அரசாங்கத்தின் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பு தகர்ந்துவிடும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி,
நல்லாட்சி மற்றும் நல்லிணக்க எண்ணக்கருக்களை வெற்றிபெறச்செய்து நாட்டையும் மக்களையும்
வெற்றிபெறச்செய்ய எல்லோரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் எனத் தெரிவித்தார்.
இலங்கையின் அபிவிருத்தி சவால்கள் என்ற தலைப்பில் நேற்று (22) பிற்பகல் பண்டாரநாயக
சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஒரு விசேட மாநாட்டில் கலந்துகொண்டு
உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அரசாங்க அதிகாரிகளுக்கு விடுக்கப்படும் அழுத்தங்கள் தொடர்பாகவும் அவர்களது
மனக்குறைகள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க பாரபட்சமற்ற ஒரு நடுநிலையான நிறுவனக்
கட்டமைப்பை தாபிப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அரசியல்வாதிகள் தவறிழைப்பார்களேயானால் அவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளுக்கு
அதுதொடர்பாக கைநீட்ட முடியாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஒழுக்கப் பண்பாட்டின்
அடிப்படையிலான நல்லாட்சி எண்ணக்கருவை பாதுகாத்து ஒரு சிறந்த சுபீட்சமான தேசத்தைக்
கட்டியெழுப்புவது தொடர்பாக முதலாவது முன்மாதிரியாக இருக்கவேண்டியவர்கள்
அரசியல்வாதிகளாகும் என்றும் குறிப்பிட்டார்.
இன்றிருக்கும் பொருளாதார நிலைமைகளில் நாட்டிடைக் கட்டியெழுப்புவதற்காக
செய்யவேண்டியது ஒருவரையொருவர் குற்றம் சுமத்திக்கொண்டிருக்காது தாம் பொறுப்பேற்ற
விடயங்களை உரிய முறையில் நிறைவேற்றி நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் கடமைகளையும்
பொறுப்புகளையும் நிறைவேற்றுவதாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கையின் அபிவிருத்தி சவால்கள் என்ற தலைப்பில் பிரதான உரையை மத்திய வங்கியின்
ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி அவர்கள் நிகழ்த்தினார். அவர் தமது உரையில்
வெளிநாட்டு முதலீடுகளை எதிர்வரும் காலங்களில் ஐந்து மடங்காக அதிகரிப்பதே அரசாங்கத்தின்
இலக்காகும் எனக் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தின் சிறந்த வெளிநாட்டுக் கொள்கையை பயன்படுத்தி சர்வதேசத்துடன்
புதிய வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொண்டு முதலீட்டு சந்தர்ப்பங்களை அதிகரித்து
ஏற்றுமதியை அதிகரித்து இலங்கையை பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்க நடவடிக்கை
எடுப்பதாகவும் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் மேலும் தெரிவித்தார்.
தற்போதுள்ள சட்ட கட்டமைப்புக்குள் அபிவிருத்தி சவால்களை வெற்றிகொள்வதில் அரச
அலுவலர்களின் பொறுப்புக்கள் என்ற தலைப்பில் ஒரு விசேட உரையை சட்டமா அதிபர் ஜயன்த
ஜயசூரிய அவர்கள் நிகழ்த்தினார்.
பிரதமர் ரனில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளும்
இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.